கருக்கலைப்புக்கு வந்த மாணவியை ஆபாச படம் எடுத்த கொடூரம்; காதலனுடன் போலி டாக்டர் கைது –பரபரப்பு தகவல்கள் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஓலப்பாடியை சேர்ந்தவர் நவாப் (வயது 47). 10-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் பெத்தநாயக்கன்பாளையத்தில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். கடையின் ஒரு பகுதியில் நவாப், டாக்டர் போல் பொதுமக்களுக்கு சிகிச்சையும் அளித்து வந்தார்.அருகில் உள்ள ஆரியூரை சேர்ந்த 17 வயதுள்ள ஒரு மாணவி பிளஸ்-2 தேர்வுஎழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கிறார். இவர் உடல்நலம் சரியில்லை என நவாப்பின் மருந்து கடைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அந்த மாணவி வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் மருந்து கடைக்கு சென்று நவாப்பிடம் விசாரித்தனர்.அதற்கு நவாப், மாணவி இங்கு வரவில்லை என்றார். ஆனால் கடையின் வெளியே மாணவியின் செருப்பு இருந்ததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மாணவி மிகவும் சோர்வான நிலையில் இருந்தார். உடனே அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.நவாப் அந்த மாணவிக்கு மயக்க ஊசி போட்டு ஆபாசமாக செல்போனில் படம் பிடித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் உறவினர்கள் நேற்று காலை மருந்துகடைக்கு சென்று நவாப்பிடம் நடந்தது குறித்து கேட்டனர். நவாப் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் அவரை வெளியே இழுத்து வந்து சரமாரியாக அடித்து உதைத்தார்கள்.அங்கு இருந்த நவாப்பின் மோட்டார்சைக்கிளை தீவைத்து எரித்ததுடன், மருந்துகடையையும் சூறையாடினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு ஏராளமானவர்கள் கூடிவிட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏத்தாப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நவாப்பை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மாணவியையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரித்தனர்.பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள உமையாள்புரத்தை சேர்ந்த ரகுபதி (22) என்ற பெட்ரோல் பங்க் ஊழியர் அந்த மாணவியை காதலித்து வந்தார். ஆசைவார்த்தை கூறி மாணவியுடன் அவர் பலமுறை உல்லாசமாக இருந்ததில், மாணவி கர்ப்பமானார். இதுபற்றி அந்த மாணவி ரகுபதியிடம் தெரிவித்தார்.ரகுபதி தனது நண்பரான நவாப்பிடம் அந்த மாணவிக்கு கருக்கலைப்பு செய்யுமாறு கூறினார். 10 நாட்களுக்கு முன்பு அந்த மாணவி, நவாப்பின் மருந்துக்கடைக்கு சென்றார். அங்கு நவாப் மாணவியின் ஆடைகளை களைந்து கருக்கலைப்புக்கு ஊசிபோட்டு, மாத்திரை கொடுத்து சிகிச்சை அளித்தார். அப்போது செல்போனிலும் மாணவியை ஆபாசமாக படம் பிடித்து உள்ளார்.அந்த மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மீண்டும் நவாப்பிடம் சென்று இருக்கிறார். அப்போதும் நவாப் அந்த மாணவிக்கு ஊசிபோட்டு பாலியல் தொல்லை கொடுத்து செல்போனில் படம் பிடித்து உள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து ஏத்தப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் நவாப் மற்றும் காதலன் ரகுபதி ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் இருவரும் சேலம் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.