நீதிபதியானார், பிச்சையெடுத்த திருநங்கை

பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்த திருநங்கை ஒருவர் இன்று லோக் அதாலத் நீதிபதியாகி உள்ளார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஜோயிதா மோதோக்தி, இவர் திருநங்கை என்பதால் சக மாணவ, மாணவிகள் கல்லூரியில் கேலி செய்துள்ளனர். இதனால் இவர் தனது கல்லூரி படிப்பை பாதியிலே நிறுத்தி விட்டார். திருநங்கை என்று தெரிந்தவுடன் பெற்றோரும் அவரை வீட்டை விட்டு துரத்திவிட்டனர். அதன் பின் கால் சென்டரில் வேலை செய்தார். அங்கும் இவர் கேலிக்கு உள்ளானதால், அங்கிருந்தும் வெளியேறினார். அதன் பின் பல்வேறு இடங்களுக்கு சென்று வேலை கேட்ட போதும் திருநங்கை என்பதால், வேலை மறுக்கப்பட்டது.

கடைசியில் தெருவில் மற்றவர்களிடம் கையேந்தி பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளானார். தினாஜ்பூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு அருகே உள்ள பேருந்து நிலையத்தில் தங்கி இருந்தார். பின்னர் சமூக சேவகராக மாறினார். அதன் பின் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட திருநங்கைகளுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.அதுமட்டுமின்றி எல்.ஜி.பி.டி. எனப்படும் மாற்றுப் பாலின சுதந்திரத்தைக் கொண்டவர்களுக்காக அமைப்பு ஒன்றை துவங்கினார். இந்த அமைப்பின் மூலம் அரசாங்கத்திலிருந்து மாற்றுப்பாலினத்தவர்களுக்கு கிடைக்க வேண்டிய தேவைகளை நிறைவேற்றினார்.

பாலியல் தொழிலாளிகளாக இருந்து தற்போது எந்தவித ஆதரவும் இல்லாதவர்களுக்கான முதியோர் இல்லத்தையும் உருவாக்கி உள்ளார். ஜோயிதா மோதோக்தியின் இந்த சமூக பணிகளுக்காக தினாஜ்பூர் மாவட்டத்தின், லோக் அதாலத் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார், நாட்டிலேயே திருநங்கை ஒருவர் நீதிபதியாக அமர்த்தப்படுவது இதுவே முதல்முறையாகும். ஜோயிதா மோதோக்தி இத்துறையில் வெற்றிப்பெற vtv24x7ன் வாழ்த்துக்கள்