தொடர்கிறது தேர்தல் பறக்கும்படை சோதனை மணல் வியாபாரியிடம் ரூ.3½ லட்சம் பறிமுதல்

VEHICLE_cheakingஅம்பத்தூரில் பறக்கும்படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் மணல் வியாபாரி கொண்டு சென்ற ரூ.3½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை அம்பத்தூர் ஐ.சி.எப்.காலனி பகுதியில் நேற்று முன்தினம் தேர்தல் பறக்கும்படை கண்காணிப்பாளர் மகாதேவன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆவடியில் இருந்து அயப்பாக்கம் வழியாக ஐ.சி.எப். காலனி சாலையில் சென்ற ஒரு காரை மறித்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அந்த காரில் தேர்தல் விதிமுறையை மீறி ரூ.3½ லட்சம் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஆவடி அய்யன்குளம் பகுதியை சேர்ந்த மணல் வியாபாரி சரவணலிங்கம் என்பது தெரியவந்தது. அவர் கொண்டு சென்ற பணத்திற்கு உரிய ஆவணம் உள்ளதா? என அதிகாரிகள் கேட்டனர். ஆனால் சரவணலிங்கத்திடம் உரிய ஆவணம் இல்லை. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.3½ லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

அதைத்தொடர்ந்து அம்பத்தூர் தாசில்தார் பாலமுருகன், தேர்தல் துணை தாசில்தார் மணிகண்டன் ஆகியோர் விசாரணை நடத்தினர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அதிகாரிகள் அம்பத்தூர் அரசு கருவூலத்தில் செலுத்தினர்.