சென்னைக்கு வந்த விமானத்தில் 1½ கிலோ தங்கம் கடத்திய ஆந்திரவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்

goldகுவைத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் 1½ கிலோ தங்கம் கடத்தி வந்த ஆந்திர பெண்ணை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தி கொண்டு வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து நேற்று அதிகாலை குவைத்தில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. இதில் ஆந்திராவைச் சேர்ந்த ராஜம்மாள் (வயது 46) என்பவர் வந்திருந்தார். இவர் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அவரை நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது அவரிடம் இருந்த சூட்கேசில் எதுவும் இல்லை. இதையடுத்து தனி அறைக்கு அழைத்துச்சென்ற பெண் அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர். அப்போது உடலில் தங்கக்கட்டிகளை மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.அவரிடம் இருந்து ரூ.48 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 600 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராஜம்மாளை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்