அடிகளார் பேனரை அகற்றிய ட்ராபிக் ராமாசாமியை தாக்கிய பக்தர்கள்

மேல்மருவத்தூரில் 150 அடிக்கும் மேல் வைக்கப்பட்டிருந்த ‘அம்மா’ பேனரை அகற்ற முயன்ற ட்ராபிக் ராமாசாமியை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து அடித்து காயமேற்படுத்தியுள்ளனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலின் நிறுவனர் அடிகளாரை அம்மா என்று தான் அழைப்பார்கள். அவருடைய பிறந்தநாள் மார்ச் 3ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அதற்காக, மேல்மருவத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் இரு மருங்கும் 100 அடிக்கும் உயரமான அடிகளாரின் பேனர் வைக்கப்பட்டுள்ளது. வருடம்தோறும் இப்படி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைப்பது ‘அம்மா’ பக்தர்களின் வழக்கம். மேல்மருவத்தூர் வழியாக நெடுவாசல் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்ற ட்ராபிக் ராமாசாமி, இந்த அத்துமீறல் பேனர்களைப் பார்த்ததும், காரை விட்டு இறங்கி, அதனை அகற்ற முற்பட்டுள்ளார்.

உடனே அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், அவரை அடித்துக் காயமேற்படுத்தியுள்ளனர். தாக்குதலை தடுக்க முயன்ற அவருடைய பாதுகாப்பு போலீஸையும் அடித்துள்ளனர். அப்போது, சம்பவம் நடந்த இடத்தில் காவல் உதவி ஆய்வாளர் இருந்திருக்கிறார். அதன்பிறகு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று, ட்ராபிக் ராமாசாமி நெடுவாசல் சென்றார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”பேனர்களை அகற்ற உயர்நீதிமன்றம் கொடுத்திருக்கும் உத்தரவு நகலைக் கான்பித்த பிறகும் என்னைத் தாக்கினார். அதனை அங்கு நின்றுகொண்டிருந்த காவல் உதவி ஆய்வளர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். நெடுவாசலிலிருந்து இதுகுறித்து வழக்குத் தொடுப்பேன் என கூறினார்.