சிம்பு முதல் முறையாக இசையமைத்துள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’

நடிகர் சிம்பு முதல் முறையாக இசையமைத்துள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’. இதில் சந்தானம் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். சேதுராமன் இயக்கியுள்ள இப்படத்தை காமெடி நடிகர் விடிவி கணேஷ் தயாரித்துள்ளார். “நான் நல்லவன் என்று சொல்லவில்லை. நடந்தது நடந்துவிட்டது, அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என ‘சக்க போடு போடு ராஜா’ பட ஆடியோ விழாவில் நடிகர் சிம்பு ஓப்பனாக பேசினார்.

இப்படம் டிசம்பர் 22ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பாடல்கள் நேற்று இரவு வெளியிடப்பட்டது. நடிகர் தனுஷ் பாடலை  வெளியிட, படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர். விழாவில் தனுஷ் பேசும்போது, “இந்த விழாவிற்கு சிம்பு அழைப்பு விடுத்ததாலேயே வந்தேன். நான் விழாக்களுக்கு அழைப்பு விடுத்தால் அவரும் வருவார். அவரும் நானும் நல்ல நட்புடன் தான் உள்ளோம். மற்றவர்கள் கூறுவது போல் எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. எங்களுக்கு நடுவில் இருப்பவர்களுக்குள் தான் பிரச்சனை உள்ளது.  நான் இங்கு வந்தபோது சிம்புவின் ரசிகர்கள் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேபோல் என் விழாக்களுக்கு அவர் வரும்பொழுது எனது ரசிகர்களும் அவருக்கு இதேபோன்ற வரவேற்பை அளிப்பார்கள். ரசிகர்கள் அப்படிதான் இருக்கவேண்டும். சிம்பு தனது ரசிகர்களுக்காக ஆண்டுக்கு இரண்டு திரைப்படங்களாவது நடிக்க வேண்டும். அது உங்கள் கடமை. உங்கள் ரசிகர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்றார் தனுஷ். 

பிறகு சிம்பு பேசும்போது, “என் நண்பர் சந்தானத்துக்காக தான் இந்தப்  படத்திற்கு இசையமைக்க சம்மதித்தேன். அவரது வளர்ச்சிக்கு நான் எப்போதும் பக்கபலமாக இருப்பேன். கடந்த சில நாட்களாக என்னைப்பற்றி சில பிரச்னைகள் போய்கொண்டிருக்கிறது. அவை அனைத்தும் பொய் என்று நான் சொல்லமாட்டேன்.

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லை. அந்த விஷயத்தில் என் மீது தவறுகள் இருந்தால் அதை படம் எடுக்கும் போதோ அல்லது எடுத்து முடித்த பின்னரோ அல்லது படம் ரிலீஸ் ஆகும்போதோ கூறியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, படம் வெளியாகி 6 மாதங்களுக்கு பிறகா புகார் கூறுவது. என் மீதும் சில தவறுகள் இருக்கும் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்.  ஆனால், இதுபோன்ற விஷயங்களைப் பற்றிப்  பேச ஒரு முறை உள்ளது, அவர்கள் செய்தது சரியல்ல. நானும் நல்லவன் இல்லை. நடந்தது நடந்துவிட்டது அதற்காக, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

அதிகபட்சமாக என்ன செய்துவிடுவீர்கள். என்னை நடிக்கவிடாமல் தடுப்பீர்கள். ஆனால், என் ரசிகர்களுக்கு நான் ஏதாவது செய்து கொண்டுதான் இருப்பேன். அதை யாராலும் தடுக்க முடியாது. மணிரத்னம் இப்போதும் நான் படத்தில் இருக்கிறேன் என்று தான் கூறிவருகிறார். அவருக்கு என் மீது ஏன் அவ்வளவு நம்பிக்கை என்று தெரியவில்லை. அவரும் உங்களைப் போல எனது ரசிகரா என்பதும் தெரியவில்லை. 20-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என கூறியுள்ளார். அந்த படத்தில் நடிப்பதற்காக உடம்பை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இருப்பினும் அது சற்று கடினமாக இருக்கிறது. விரைவில் நல்லது நடக்கும் என நம்புகிறேன்” என்றார்.