தனக்கு வழங்குவதாக அறிவித்த பரிசுத் தொகையினை அரசு வழங்கவில்லை என சாக்‌ஷி மாலிக் வேதனை

கடந்தாண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக போராடி, இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுத்தந்தவர் சாக்‌ஷி மாலிக். மல்யுத்த வீராங்கனையான இவர் தனக்கு கொடுக்க வேண்டிய பரிசுத்தொகையினை அரியானா அரசு இன்னும் வழங்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நான் எனது வாக்குறுதியை காப்பாற்றி விட்டேன். ஆனால், எனக்கு பரிசளிப்பதாகக் கூறிய அரியானா அரசு எப்போது தன்னுடைய வாக்குறுதியை காப்பாற்றப் போகிறது? அரியானா அரசு அளித்த வாக்குறுதியெல்லாம் வெறும் ஊடகங்களுக்காக மட்டும் தானா? இவ்வாறு அவர் தெரிவித்து இருக்கிறார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாக்‌ஷி மாலிக் அரியானா திரும்பியபோது அவரை வரவேற்ற அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், அவருக்கு ரூ.3.5 கோடியை பரிசளிப்பதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.