ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழை தொடரும்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வார காலத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடுமையான கோடை காலத்திற்கு பின்னர் தற்போது தமிழகத்தின் தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பொழிவு காணப்படுகிறது. குடிநீர் பிரச்னையில் சிக்கி தவித்து வரும் சென்னை மாநகரில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வார காலத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.