ஒரு புறம் பிரிண்ட் ஆகாத 500 ரூபாய் நோட்டுகள்

மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டம் செகோன் கிராமத்தை சேர்ந்த ஹேமந்த் சோனி கடந்த செவ்வாயன்று இரவு, பொதுத்துறை வங்கியொன்றின் ஏடிஎம் மையத்திலிருந்து 1500 ரூபாய் பணம் எடுத்தார். ஏடிஎம் மிஷினில் இருந்து வந்த மூன்று 500 ரூபாய் நோட்டுகளில் இரண்டு 500 ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் எதுவும் பிரிண்டாகாமல் வெற்றுத்தாளாக வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஹேமந்த் இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கியிடம் புகார் கொடுத்தார். இதற்கு அந்த வங்கி அதிகாரிகள் இந்த நோட்டுகளை ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெற்றதாக விளக்கம் அளித்தனர். மேலும் “வாடிக்கையாளரின் புகாரைத் தொடர்ந்து அந்த நோட்டுகளை மாற்றிவிட்டோம். தற்போது ரூபாய் நோட்டுகளை நன்கு சோதனை செய்தபின்னரே ஏடிஎம்-களில் நிரப்புகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.  முன்னதாக காந்தி படம் இல்லாமல் 2000 ரூபாய் நோட்டுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.