சவாலான வேடங்களில் நடிக்க விருப்பம் – அருந்ததி நாயர்

விஜய் ஆண்டனி நடித்த ‘சைத்தான்’ படத்தில் கேரளாவில் இருந்து வந்து நாயகியாக அறிமுகமானவர் அருந்ததி நாயர். இதில்  இவருடைய நடிப்பு பேசப்பட்டது. தமிழ் சினிமா பற்றி அருந்ததி நாயரிடம் கேட்டபோது,

“ ‘சைத்தான்’ படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்தேன். நான் புதுமுக நடிகை என்றாலும், என்னை நம்பி அழுத்தமான வேடம்  கொடுத்தார்கள். இயக்குனர், ஹீரோ ஆகியோரின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நடித்தேன். படம் வெளியானதும் என்  நடிப்பை பலரும் பாராட்டினார்கள். இப்போது மலையாளத்தில் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறேன். தமிழில் ஜவஹர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறேன்.  இதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இதுதவிர மேலும் 3 பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அதில் கவர்ச்சியாக நடிக்க  வேண்டும் என்று சொன்னதால் அந்த படங்களில் நடிக்கவில்லை.

கவர்ச்சியாக நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லாததால்  அதை ஏற்கவில்லை. முதல் படத்திலேயே வெயிட் டான வேடத்தில் நடித்த என்னால், சவாலான எந்த வேடம் என்றாலும் நடிக்க முடியும் என்ற  நம்பிக்கை இருக்கிறது. எனவே, என் திறமைக்கேற்ற வேடங்களில் மட்டுமே நடிக்க ஆசைப்படுகிறேன். ‘வருத்தப்படாத வாலிபர்  சங்கம்’ ‘ரஜினிமுருகன்’ போன்ற கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். என் திறமைக்கு தீனிபோடும் நல்ல  கதாபாத்திரங்களை இயக்குனர்கள் எனக்கு தரவேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள்” என்றார்.