15 கோடி செலவில் காஞ்சிபுரத்தில் புதிய விளையாட்டு வளாகம்

 

தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110-ன் விதியின் கீழ் வெளியிட்ட அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டப்பட்டு 42 ஆண்டுகள் ஆகி விட்டதால், இந்த வளாகத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டடங்கள் மற்றும் விளையாட்டு உட்கட்டமைப்புகளை இடித்து விட்டு அதே இடத்தில் நவீன தரத்துடன் கூடிய புதிய விளையாட்டு வளாகம் ஒன்று 15 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். இவ்வளாகம் பார்வையாளர் இடம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நல அலுவலர் அறை, நிர்வாக அறை, பயிற்சியாளர் அறை, வீரர்கள் உடை மாற்றும் அறை, கழிவறைகள், சேமிப்பு அறை முதலான வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் 5 கோடி ரூபாய் செலவில் நீச்சல் பந்தய குளம், பயிற்சி நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், உடை மாற்றும் அறைகள், கழிவறைகள், அலுவலகம் மற்றும் பயிற்சியாளர்கள் அறையுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த நீச்சல்குள வளாகம் அமைக்கப்படும். கெனாயிங் மற்றும் கயாக்கிங் எனும் நீர் விளையாட்டு உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளது. தற்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இவ்விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது. சர்வதேச ரெகெட்டா எனப்படும் மிகப்பெரிய அளவிலான படகு போட்டிகளை நடத்தும் மையமாக சென்னை திகழ்கிறது.

எனவே, காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகம் அருகில், கெனாயிங் மற்றும் கயாக்கிங் விளையாட்டுகளுக்கு, முதன்மை நிலை விளையாட்டு மையம் ஒன்று 4 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.