இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பிரச்சினை மற்றும் இரட்டை இலை சின்னம் பிரச்சினை தொடர்பாக தலைமை தேர்தல் கமி‌ஷனர் நஜீம் ஜைதியை சந்திக்க ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றனர். இன்று மதியம் ஓ.பன்னீர் செல்வம் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து பேசினார். அவருடன் மைத்ரேயன், செம்மலை, மா.பாண்டியராஜன், கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழுவினர் சென்றிருந்தனர். அ.தி.மு.க. பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று விதிகளில் உள்ளது. ஆனால் சசிகலாவை ஜெயலலிதா கட்சியில் இருந்து நீக்கி மீண்டும் சேர்த்து 5 ஆண்டுகள் இன்னும் முழுமையாக பூர்த்தியாக வில்லை.

எனவே அவர் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது நிச்சயமாக செல்லாது என்று முறையிட்டனர்.  பொதுச்செயலாளர் பதவிக்கு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பொதுச்செயலாளருக்கு அடுத்ததாக அவைத்தலைவர், பொருளாளர் ஆகியோர் எங்கள் அணியில் உள்ளனர். எனவே எங்களுக்குதான் இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் என்றும் அந்த குழுவினர் தலைமை தேர்தல் கமி‌ஷனரிடம் கோரினார்கள். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “கட்சியின் சட்டவிதிகளின்படி அவருக்கு (சசிகலா) உறுப்பினர்களை நியமிக்கவோ நீக்கவோ எந்த அதிகாரமும் கிடையாது என்றும், துணை பொதுச்செயலாளர் பதவி என்பது கட்சி விதிகளில் இல்லை என்றும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம். தேர்தல் ஆணையம் விரைவில் நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறோம்” என்றார்.