நடிகர் திலீப்பிடம் 12 மணி நேரம் விசாரணை

கேரளாவில் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்பிடம் போலீசார் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். நடிகை பாவனாவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு காருடன் கடத்திய பல்சர் சுனில் என்பவன் பாலியல் ரீதியில் அவரை துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பல்சர் சுனில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

இந்த நிலையில், நடிகை மஞ்சுவாரியருடனான தனது விவகாரத்திற்கு நடிகை பாவனா தான் காரணம் என்று கருதி அவரை பல்சர் சுனில் மூலமாக நடிகர் திலீப் பழி தீர்த்துக் கொண்டதாக புகார் எழுந்தது. இந்த புகாருக்கு வலு சேர்க்கும் வகையில், கூறியபடி தனக்கு சேர வேண்டிய ஒன்றரை கோடி ரூபாயை உடனடியாக கொடுக்க வேண்டும் என்று நடிகர் திலீப்புக்கு சிறையில் இருக்கும் பல்சர் சுனில் கடிதம் அனுப்பியதும், அந்த கடிதம் ஊடகங்களில் வெளியானது. இதனை தொடர்ந்து பல்சர் சுனில் தன்னை பிளாக் மெயில் செய்வதாக நடிகர் தீலிப் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகார் குறித்து விளக்கம் பெறவும், பாவனா கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது குறித்தும் விசாரணை நடத்த நடிகர் திலீப்புக்கு ஆலுவா போலீசார் சம்மன் அனுப்பினர். அதன் அடிப்படையில் நேற்று நண்பகல் பன்னிரெண்டு முப்பது மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜரான திலீப்பிடம் நள்ளிரவு ஒரு மணி வரை விசாரணை நடைபெற்றது. திலீப்பின் நண்பர் என்று கூறப்படும் மற்றொரு நடிகர் நாதிர்ஷா மற்றும் திலீப்பின் கார் ஓட்டுனர் ஆகியோரிடடும் நேற்று முழுவதும் விசாரணை நடந்துள்ளது.