நடிகை பாவனா வழக்கில் நடிகர் திலீப் கைது

நடிகை பாவனா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில், கூட்டுசதியில் ஈடுபட்டதாக நடிகர் திலீப் நேற்று மாலை கொச்சியில் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, 14 நாட்கள் நீதிமன்ற காவலும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திலீப் மீதான நடவடிக்கை தொடர்பாக, கேரள நடிகர்கள் சங்கமான அம்மாவின் அவசரக் கூட்டம் பொதுசெயலாளர் மம்முட்டியின் கொச்சி வீட்டில் இன்று நடைபெற்றது.

இதில் நடிகர் திலீப்பை நடிகர் சங்கத்திலிருந்து நீக்குவதாக அறிவித்ததோடு, பாவனா வழக்கின் அனைத்து குற்றவாளிகளையும் தண்டிக்க முழு ஒத்துழைப்பு வழங்க எப்போதும் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. காலை 11 மணியளவில் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் நடிகர்கள் மோகன்லால், பிருத்விராஜ், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, திலீப் கேரள தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.