மாமிச உணவுகள் தரமானதா? கண்டறிவது எப்படி?

கடைகளில் மாமிச உணவுகளை வாங்கும் பொழுது பழுதடைந்ததா அல்லது புதியதா என்பதனை மாமிசம் அடிக்கடி வாங்கும் அனுபவம் உள்ளவர்கள் கண்டறிவார்கள். ஆனால் அனுபவம் குறைவானவர்கள் இலகுவில் கண்டறிய மாட்டார்கள். அதே வேளை எவருமே இறைச்சி தரமானதா எந்தவித கலப்படமும் இன்றி பாதுகாப்பானதா எமக்கு கிடைக்கின்றதா என்பதனை கண்டறிய சிரமப்படுவார்கள்.

எனவே இறைச்சி வகைகளை வாங்கும் பொழுது தரமானதா? என கண்டறிவது எப்படி  என்று பார்க்கலாம்.

தரமான கோழி இறைச்சியென எப்படி அறிவது?

இறைச்சியை நசுக்கிப் பார்த்தால் அதிலிருந்து தண்ணீர்வரக் கூடாது. காரணம் நிறைய இடங்களில் எடைக்காகத் தண்ணீரை சேர்க்கிறார்கள். இறைச்சி சிவந்த நிறத்தில் இருக்க வேண்டும். நன்றாக அழுத்திப் பார்த்தால், உள்ளே அமுங்கி சிக்கன் உடையக் கூடாது. மேற்புறங்களில் பச்சை நிறப் படிவங்கள் இருக்கக் கூடாது.

தரமான ஆட்டிறைச்சியை எப்படி கண்டறிவது?

இறைச்சி பழையதாக இருந்தால் அழுத்தித் தொடும்போது உடையும். சிவந்த நிறத்தில் இருக்க வேண்டும். பழுப்பு நிறத்தில் இருந்தால் அது பாதுகாப்பானது அல்ல என்பதை உணர வேண்டும். இறைச்சியில் அதிக வழுவழுப்புத் தன்மை இருந்தாலும் அது பாதுகாப்பானது அல்ல.

மீன் உணவு எவ்வாறு கணிப்பது?

மீன் கண்ணில் வெளிச்சம் அடித்துப் பார்த்தால் எதிரே பிரதிபலிக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே பழுதடையாத சிறந்த மீன். செதில்களில் சிவந்த நிறம் இருக்க வேண்டும். நீல நிறத்திலோ பழுப்பு நிறத்திலோ இருந்தால், அது உணவுக்கு ஏற்ற மீன் உணவு அல்ல. வயிற்றுப் பகுதியிலோ துடுப்புப் பகுதியிலோ காயங்கள் இருந்தால், அதனைப் பயன்படுத்துவது நல்லதல்ல. எப்போதும் குளிரூட்டப்பட்ட இடத்தில் பாதுகாக்கப்பட வேண்டும்.

இறால் தரமானது என எப்படிக் கண்டறிவது ?

இறாலில் தலைப் பகுதியில் மஞ்சள் நிற பொட்டுக்கள் இருந்தால், அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வழுவழுப்புத் தன்மை இருக்கக் கூடாது.