காதலிக்காக பைக் திருடிய திருடன் கைது

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், ஆரல்வாய்மொழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ச்சியாக மோட்டார் சைக்கிள்கள் திருடு போய் வந்தன. நாகர்கோவிலில் உள்ள வடசேரி, கோட்டார், நேசமணிநகர் காவல் நிலையங்களிலும், ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திலும் அடிக்கடி இது தொடர்பான வழக்குகள் பதிவாகிவந்தன. இது போலீஸாருக்கும் பெரும் தலைவலியாய் இருந்து வந்தது. இந்நிலையில் தொடர் பைக் திருட்டுச் சம்பவங்கள் குறித்து குமரி மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் துரை தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீஸார் இது குறித்து சல்லடை போட்டு பைக் திருட்டு ஆசாமியைத் தேடினர். இந்த நிலையில் வடசேரி பகுதியில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கிடமான வகையில் வாலிபர் ஒருவர் பைக்கில் வந்தார். போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் திருநெல்வேலி மாவட்டம், வெள்ளாங்குழி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற கருத்தப்பாண்டி(24) என்பது தெரிய வந்தது. போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்கு, பின் முரணாக பேசினார். இதனைத் தொடர்ந்து அவரை வடசேரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவருக்கு பல்வேறு பைக் திருட்டுச் சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடி, வடசேரி பகுதி உள்ளிட்ட பல பகுதிகளிலும் நிகழ்ந்த பைக் திருட்டுகள் சம்பந்தமாக கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளும் பார்க்கப்பட்டன.

கருத்தப்பாண்டியிடம் இருந்து மட்டும், அவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் 21 பைக்குகள் மீட்கப்பட்டன.கருத்தப்பாண்டியன் அவருடைய சில நண்பர்களையும் கூட்டு சேர்த்து கொண்டு குமரி மாவட்டத்தில் திருடப்படும் பைக்கை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பழைய இருசக்கர வாகனம் வாங்கி, விற்கும் கன்சல்டிங் கடைகளுக்கு விற்பது வழக்கமாம். குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாயாவது கிடைக்கும் என மதிப்பிடக் கூடிய அளவுக்கு உள்ள மோட்டார் சைக்கிளைத் தான் இவர்கள் கைவைப்பார்கள். ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் என்ற கணக்கில் வாரத்துக்கு 2 பைக் திருடுவது என்பதை லட்சியமாய் (!) கொண்டு இயங்கி வந்துள்ளனர்.கருத்தப்பாண்டி இத்தனையும் செய்தது காதலிக்காக என்பதுதான் அதில் கூடுதல் விஷயம். கருத்தப்பாண்டியின் காதலி நாகர்கோவிலில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் பிகாம் படித்து வருகிறார். வெள்ளாங்குழியில் இருந்து தன் காதலியைச் சந்திக்க,

அரசுப் பேருந்தில் நாகர்கோவில் வரும் கருத்தப்பாண்டி நாகர்கோவிலில் இருந்து கிளம்பும் போது ஏதாவது ஒரு பைக்கை திருடிச் செல்வது வழக்கமாம். இதை சக நண்பர்களோடு சேர்ந்து செய்துள்ளார் கருத்தப்பாண்டி.இது குறித்து பேசிய காவல் துறை அதிகாரி ஒருவர்,’’கருத்தப்பாண்டி திருடிய பைக்குள் பெரும்பாலும் சாவியை மறந்து வைத்து விட்டு சென்றவர்களும், அவசரத்தில் பைக்கில் லாக் போடாமல் சென்றவர்களும் தான். கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தை தனக்குச் சாதகமாக பயன்படுத்தியுள்ளார்.இவர் மீது திருச்சி ஜீயபுரத்தில் நடந்த இரட்டைக் கொலை வழக்கு உள்பட பல வழக்குகளும் நிலுவையில் உள்ளன.