படக்குழுவினருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா, ஜோதிகா

தென்னிந்தியாவின் இளம் ஹீரோக்களில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவர் நிவின் பாலி. மொழி எல்லைகளை தாண்டி அவரது ரசிகர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவது அனைவரும் அறிந்ததே. அவரது அடுத்த படமான ‘காயம்குளம் கொச்சுண்ணி’ படத்தை ’36 வயதினிலே’ புகழ் ரோஷன் ஆண்டிரூஸ் இயக்குகிறார். ‘பீரியாடிக் ஆக்ஷன்’ படமான இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ‘ஸ்ரீ கோகுலம் மூவிஸ்’ சார்பாக திரு. கோகுலம் கோபாலன் தயாரிக்கின்றார். 

மலையாள சினிமா வரலாற்றில் மிக அதிக பொருட்ச்செலவில் உருவாக்கப்படும் படம் இது தான் என கூறப்படுகிறது. இந்த படம் பிற மொழி ரசிகர்களிடையேயும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. முதல்  அறிவிப்பு வந்த நாளிலிருந்தே  இப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கடந்த இரண்டு  மாத காலமாக மங்களூரில் இப்படத்தின் படப்பிடிப்பு இடை விடாமல் நடந்து வருகின்றது. இப்படத்தை அடுத்த ஆண்டு  கோடை  விடுமுறை காலத்தில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் . வெளியாட்கள் யாரும் உள்ளே நுழையாதபடி  இப்பட அணி கண்டிப்பான விதிகளை பின்பற்றிவருகின்றது. ஏனென்றால் இப்படத்திற்காக எழுப்பப்பட்டிருக்கும் பிரம்மாண்ட , பிரத்தியேக செட்களின் சிறப்பு அவ்வாறானது. சில நாட்களுக்கு முன்பு நடிகர்  சூர்யா மற்றும் ஜோதிகா இப்படக்குழுவினர் யாரும் எதிர்பாராத நேரத்தில் இந்த படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளனர் . படப்பிடிப்பில் பரபரப்பாக இருந்த இயக்குனர் ரோஷன் ஆண்டிரூஸ், கதாநாயகன் நிவின் பாலி மற்றும் தயாரிப்பாளர் திரு. கோகுலம் கோபாலன் ஆகியோர்  இவர்களின் “திடீர்” வருகையால் மகிழ்ச்சியானார்கள். வெகு நேரம் இந்த படப்பிடிப்பு செட்டில் இருந்த சூர்யாவும் ஜோதிகாவும்  அங்கு எழுப்பப்பட்டிருக்கும் பிரம்மாண்ட செட்களையும், ரோஷன் ஆண்டிரூஸ் மற்றும்  ‘காயம்குளம் கொச்சுண்ணி குழுவின் அசுர உழைப்பையும் மனதார பாராட்டினர். 

இது குறித்து இப்பட இயக்குனர் ரோஷன் ஆண்டிரூஸ் பேசுகையில், ” சூர்யா மற்றும் ஜோவின் இந்த ‘சர்ப்ரைஸ் விசிட்’ எங்கள் அனைவரையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சூர்யா மற்றும் ஜோதிகாவுடனான எனது நட்பு ’36 வயதினிலே’ படத்தின் மூலம் மேலும் வளர்ந்தது. பலமான, அழகான நட்பு எங்களுக்குள் உள்ளது. எனது பட பிடிப்பு தளத்திற்கு அவர்கள் இருவரும் வந்ததில் எனக்கு மிகுந்த சந்தோஷம். ‘காயம்குளம் கொச்சுண்ணி’ படத்தை பற்றிய  தகவல்களை மிகுந்த ஆர்வத்துடன் சூர்யா என்னிடம் கேட்டறிந்தார். சூர்யா மற்றும் ஜோதிகா என் மேல் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடே அவர்களது இந்த ‘சர்ப்ரைஸ் விசிட் ‘. அவர்கள் இருவரும் எனக்கு எனது குடும்பம் போல் ” எனக் கூறினார்.