மாணவி வளர்மதி மீதான குண்டர்சட்டம் ரத்து

ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக கதிராமங்கலம், நெடுவாசல் ஆகிய கிராமங்களில் துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்தது காவல்துறை, அதன்படி கோவை உள்ள சிறையில் வளர்மதி அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால், மாணவி வளர்மதியை இடைநீக்கம் செய்து பெரியார் பல்கலைக்கழகம் அறிவித்தது.

இந்நிலையில் வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, அவரது தந்தை மாதையன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக தனது மகள் உரிய அனுமதி பெற்று போராடியதாகவும், எனவே அவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பான மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், வளர்மதியின் குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.