ஸ்டாலின் தலைமையில் நாளை போராட்டம்

தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் பேசுகையில், “கன்னியாகுமரியில் ஒக்கி புயலில் காணாமல் போன மீனவர்கள் குறித்து தெளிவான தகவல் எதுவும் வரவில்லை. மீனவர்கள் குறித்து மாவட்ட ஆட்சியர், அமைச்சர் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கணக்கை காட்டுகின்றனர். மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி எடுக்க வேண்டும் எனக் கோரி நாளை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எனது தலைமையில் போராட்டம் நடைபெற இருக்கிறது.

மேலும், மீனவர்களின் நிலை குறித்து ஆளுநரிடம் பேச இருக்கிறேன். ஆளுநரை சந்திக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.  தொடர்ந்து ஆர்.கே. நகர் தேர்தல் குறித்து கேட்கப்பட்ட போது, “என்ன தான் முதல்வர் அணி சார்பில் ஆர்.கே. நகரில் பிரச்சாரம் நடத்தினாலும் அவர்களுக்கு தோல்வியே மிஞ்சும். ஆர்.கே. நகரில் குட்டிக்கரணம் போட்டாலும் அவர்கள் டெபாசிட் இழப்பது உறுதி. ஆர்.கே. நகர் மக்களிடையே தி.மு.கவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.கண்டிப்பாக இந்த தேர்தலில் தி.மு.க வெற்றி பெறும்” என தெரிவித்தார்.