“‘ரோமியோ’ அனைவரின் ரசனைக்கும் ஏற்ற மகிழ்ச்சியான குடும்ப பொழுதுபோக்கு படம்”- நடிகை மிருணாளினி ரவி

‘ரோமியோ’ படத்தின் ட்ரெய்லரில் நடிகை மிருணாளினி ரவியின் நடிப்பைப் பார்த்து கிடைத்த பாராட்டுகள் அனைத்தும் அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது சினிமா கரியரில் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையிலான கதாபாத்திரங்களையே தொடர்ந்து அவர் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் விஜய் ஆண்டனி கதாநாயகனாகவும் மிருணாளினி கதாநாயகியாகவும் நடித்துள்ள ‘ரோமியோ’ திரைப்படம் நாளை (ஏப்ரல் 11) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தில் தனது நடிப்புக்கு ரசிகர்களின் வரவேற்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் மிருணாளினி.

படம் குறித்து நடிகை மிருணாளினி ரவி கூறுகையில், “சில கதாபாத்திரங்கள் நடிப்பதற்கு எளிதாகவும் அதேசமயம் சவாலாகவும் இருக்கும். ‘ரோமியோ’வில் எனது கதாபாத்திரம் இதுபோன்றதுதான். என்னுடைய நிஜ கதாபாத்திரம் இந்தப் படத்தின் கதாபாத்திரத்திற்கு அப்படியே மாறுபட்டது. பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தை இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும். இயக்குநர் விநாயக் வைத்தியானந்தன் என்னிடம் கதையை சொன்னபோது சுவாரஸ்யமாகவும் வலுவான எமோஷனல் அடித்தளமும் இதில் இருக்கிறது என்பது புரிந்தது.

கூடுதலாக,  திறமையான நடிகர் விஜய் ஆண்டனி சாருடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். ஆரம்பத்தில் தலைவாசல் விஜய், விடிவி கணேஷ், யோகி பாபு மற்றும் பல அனுபவமிக்க நடிகர்களுடன் பணியாற்றப் போகிறேன் என்பது பதட்டமாக இருந்தது. ஆனால், படப்பிடிப்பில் அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் நிறைய இருக்கிறது. ’ரோமியோ’ ஒரு மகிழ்ச்சியான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இது அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும்” என்றார்.

’ரோமியோ’ படத்தை விநாயக் வைத்தியநாதன் எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். முதன்மை கதாபாத்திரங்களில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி நடித்துள்ளனர். இவர்களுடன் யோகி பாபு,  விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா, மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பரத் தனசேகர் இசையமைத்திருக்க, ஃபரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.