படுத்தால் தான் பட வாய்ப்பு என்றார்கள், பார்வதி மேனன் பேட்டி

மலையாள திரையுலகில் தான் போராடிக் கொண்டிருந்தபோது சீனியர் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை பார்வதி மேனன் தெரிவித்துள்ளார். பூ படம் மூலம் கோலிவுட் வந்தவர் கேரளாவை சேர்ந்த நடிகை பார்வதி மேனன். சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தம வில்லன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் மலையாள தொலைக்காட்சி சேனல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கூறியதாவது, பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் ஆட்கள் சினிமா துறையில் உள்ளனர். என்னையும் கூட கேட்டிருக்கிறார்கள். அதுவும் படுக்கைக்கு அழைப்பது அவர்களின் உரிமை போன்று அழைத்தார்கள். என்னை படுக்கைக்கு அழைத்தவர்களிடம் முடியாது என்று கூறிவிட்டேன். சினிமா துறையில் வளர்ந்துவிட்டால் படுக்கைக்கு அழைக்க மாட்டார்கள்.  மலையாள திரையுலகில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. இது பல துறைகளில் உள்ளது.

இது தான் உண்மை. அப்படி இருக்கும்போது நாம் ஏன் இதை கேட்டு அதிர்ச்சி அடைகிறோம்? நான் சிலரின் விருப்பத்தை நிறைவேற்றாததால் எனக்கு முன்பு பட வாய்ப்புகள் வராமல் இருந்தது. தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட எந்த திரையுலகிலும் என்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை.  மலையாள திரையுலகில் மட்டும் தான் வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கைக்கு வா என்று அழைத்தார்கள். நான் சர்ச்சையை கிளப்ப விரும்பவில்லை.

இது தான் உண்மை என்று அனைவருக்கும் தெரியும். ஒரு காலத்தில் மலையாள திரையுலகில் சீனியர் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் வெளிப்படையாகவே என்னை படுக்கைக்கு அழைத்தார்கள். அப்படிப்பட்டவர்களுடன் நான் பணியாற்றவில்லை. மலையாள திரையுலகில் இப்படி நடந்ததால் நான் தமிழ், கன்னட படங்களில் நடிக்கச் சென்றேன். சினிமா துறை என்றால் இப்படித்தான் என்று சிலர் என்னை சமாதானம் செய்தனர். 

படுத்து தான் படம் பண்ண வேண்டும் என்றால் அது எனக்கு வேண்டாம். நான் எங்காவது சென்று ஏதாவது செய்கிறேன். முடியாது என்று சொல்கிற பவர் நமக்கு உண்டு என்பதை நாம் உணர வேண்டும். சில சீனியர் நடிகர்கள் என் உடலை பார்த்து அசிங்கமாக கமெண்ட் அடித்தனர். இதை பார்த்து எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு பெண்ணை அசிங்கமாக கமெண்ட் செய்வது சாதாரண விஷயம் என நினைக்கிறார்கள் என்றார் பார்வதி மேனன்.