நிவின்பாலி-சூரி கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ ; அக்-1ல் ரிலீஸ்

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் மூலம் மனிதர்களின் இதயங்களை நேரடியாகத் தொடுகின்ற படங்களை கொடுத்துவரும் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பாக இது உருவாகியுள்ளது. 

நடிகர் நிவின்பாலி ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் நம்பிக்கையுடன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாகக் களம் இறங்குகிறார்.. சமீப காலமாக கதையின் நாயகனாக மாறிவிட்ட சூரி, நிவின்பாலிக்கு இணையான மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிப்புத் தாரகை என்று ரசிகர்களால் பாராட்டப்படும் நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளார்.

இயக்குநர் ராமின் படங்களுக்கு உயிரோட்டமான இசையை தொடர்ந்து அளித்து வரும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. 

ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தற்போது ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் நிவின்பாலியின் வித்தியாசமான தோற்றமும் நடிப்பும், அவருக்கு ஈடு கொடுக்கும் ஸ்டைலிஷான லுக்கில் சூரியின் நடிப்பும் அந்த ரயில் பயணமும், நிச்சயமாக இயக்குநர் ராம் இப்படத்தின் மூலம் ரசிகர்களைப் புது உலகத்திற்கு அழைத்துச் செல்வார் என எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சமீப நாட்களாக சீரியஸான கதாபாத்திரங்களில் கதைநாயகனாக நடித்து வரும் சூரியின் காமெடியை மீண்டும் இப்படத்தில் பார்த்து ரசிக்க முடியும் என்கிற நம்பிக்கையையும் இந்த டீசர் தருகிறது.

படம் ஏற்கனவே தயாராகிவிட்டாலும், பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பிரிவுகளில் விருதுகளை வென்று, அந்தப் பெருமையுடன் தற்போது அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரசிகர்களைச் சந்திக்க வருகிறது.