ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நீக்க நடவடிக்கை

அரசு உதவிபெறும் மற்றும் அரசு பள்ளிகளுக்கு பள்ளிகல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இது வரை தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு இது தான் கடைசி வாய்ப்பு. இந்த முறை தேர்ச்சி பெறவில்லை என்றால் பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள். இதை ஏற்றுக்கொள்வதாக கையெழுத்திட வேண்டும் என்று ஒவ்வொரு ஆசிரியரிடம் பள்ளி நிர்வாகம் வலியுறுத்துகிறது.

அரசு உதவிபெறும் மற்றும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிபுரிய தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2011ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. 2011ஆம் ஆண்டு 3000 ஆசிரியர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் 5 ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழை கல்வி அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். ஆனால் கடந்த சில வருடங்களாக தகுதித்தேர்வு நடத்தப்படவில்லை. அதனால் ஏப்ரல் 29,30 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். தகுதித்தேர்வு அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ‘கெடு’வாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க செயலாளர் பி.கே. இளமாறன் கூறியதாவது, மத்திய அரசு ஆண்டுதோறும் தகுதித்தேர்வை நடத்துகிறது. ஆனால் தமிழக அரசு 2012ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் நடத்துக்கிறது. பணியில் இருக்கிற ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு முறையில் இருந்து விலக்கு அளித்து சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். அது போல முன்னுரிமை அடிப்படையில் நியமிக்கப்பட்ட 3200 சிறப்பு ஆசிரியர்களுக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.