பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்குகிறது

‘ரெமோ’ படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கிவரும் ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். நயன்தாரா, பிரகாஷ்ராஜ், ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தை ஆர்.டி.ராஜா தயாரித்து வருகிறார். சென்னையில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, விரைவில் வெளிநாட்டில் சில முக்கிய காட்சிகளை படமாக்கவுள்ளார்கள்.

‘வேலைக்காரன்’ இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன. பொன்.ராம் இயக்கவுள்ள இப்படத்தையும் ஆர்.டி.ராஜாவே தயாரிக்கவுள்ளார். சமந்தா நாயகியாக நடிக்கவுள்ள இப்படத்துக்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். முழுக்க தென்காசி பகுதியில் நடைபெறுவது போன்று இப்படத் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் பொன்.ராம்.

இப்படத்துக்கான படப்பிடிப்பு இடங்களை முடிவு செய்துவிட்டது படக்குழு. மே இறுதியில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளார்கள். காமெடி மற்றும் ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்துள்ளார் பொன்.ராம். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ ஆகிய வரவேற்பைப் பெற்ற படங்களைத் தொடர்ந்து பொன்.ராம் – சிவகார்த்திகேயன் கூட்டணி இணைந்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.