ஆச்சர்யமான – நெகிழ்ச்சியான என்.எஸ்.கே .விழா! பாரதிராஜா பெருமிதம்

மறைந்த நடிகர் என்.எஸ்.கே அவர்களின் பிறந்த தினம் தி.நகர் சோஷியல் கிளப்பில் நகைச்சுவை நடிகர்கள் தினமாக கலப்பை மக்கள் இயக்கம் கொண்டாடியது. இந்த விழாவிற்கு பாரதிராஜா தலைமை தாங்கினார்.

நகைச்சுவையாக நடிப்பது கஷ்டம்- பாரதிராஜா

நகைச்சுவை நடிகர் மட்டுமல்லாமல், தன்னிடமுள்ளதை பிறருக்கு வழங்கி வாழும் வள்ளலாக வாழ்ந்தவர் என்.எஸ்.கே. அவருக்கு இப்படியொரு பிரமிப்பான விழாவை நடத்துவது உண்மையிலே மகிழ்ச்சியாக உள்ளது.கிட்டத்தட்ட 108- நகைச்சுவை கலைஞர்களுக்கு பரிசளித்து நகைச்சுவை கலைஞர்களை ஒரே இடத்தில் சங்கமிக்க வைத்தது ஆச்சர்யமாக உள்ளது. பி.டி.செல்வகுமாரின் அன்புக்கு கட்டுப்பட்டு கலந்து கொண்டேன். இந்த விழாவில் கலந்து கொண்டமைக்காக நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் அடைகிறேன் .நான் இயக்குனராக வரும்போது புதுமைப்பெண் படத்தின் கதையை முதலில் ஜெயலலிதா அம்மையாருக்குத்தான் சொன்னேன் .சொன்னதை அப்படியே கொடுங்கள் சிறப்பாக இருக்கும் என்று சொன்னார்கள் .அந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனதும் ,ரேவதியை வைத்து படமாக்கினேன். இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

எஸ் வி சேகர் :
நகைச்சுவை என்பது நமது உடலை மனதை வாழ்க்கையை உற்சாகமாக வைப்பதாகும் .என் எஸ் கே அவர்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர் .தான் சம்பாதித்து வைத்ததை தனக்காக மட்டும் இல்லாமல் மக்களுக்காக செலவு செய்து வறுமையால் வாடியவர். பொதுவாக நகைச்சுவை நடிகர்களின் வாழ்வில் பல சோகம் இருக்கும். அந்த சோகம் முகத்தில் தெரிந்தால் காமெடி ட்ராஜடியாகி விடும். இவ்வளவு நகைச்சுவை நடிகர்கள் ஒரே இடத்தில் பார்ப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இப்படியொரு அற்புதமான விழாவை ஏற்பாடு செய்த பி.டி.செல்வகுமாரின் கலப்பை மக்கள் இயக்கத்திற்கு எனது வாழ்த்துக்கள்!

சி ஆர் . சரஸ்வதி

திரைத்துறையில் சாதனை படைத்தோர்க்கு விழா எடுக்க ஒரு மனசு வேண்டும் .என். எஸ். கே தான் மருத்துவமனையில் இருக்கும் கடைசி காலத்தில் கூட உதவி என்று வந்தவருக்கு தனது வெள்ளி செம்பை கொடுத்தவர் .அப்படிப்பட்ட மகத்தான கலைஞனை ஞாபகப்படுத்துவது ஒட்டுமொத்த சினிமாவிற்கு செய்யும் தொண்டாகும் .இந்த விழா நடத்துவதால் பி .டி .செல்வகுமாருக்கு எந்த வித பயனும் கிடைத்து விட போவதில்லை .ஆனால் என்னை போன்று இங்கு வந்துள்ள அத்தனை நகைச்சுவை நடிகர்களின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார் .அடுத்த வருடம் இந்த விழா இதை விட பெரிதாக நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த விழாவை கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்த பி டி .செல்வகுமார் வரவேற்று பேசினார். விஜயமுரளி, டைமண்ட் பாபு, நெல்லை சுந்தரராஜன் ஆகியோர் பேசினார்கள். ரமேஷ் கண்ணா, பவர் ஸ்டார், பெஞ்சமின், ஆர்த்தி கணேஷ், சிசர் மனோகர் இசையமைப்பாளர்கள் சிற்பி, சுந்தர்.சி, சித்ரா லக்ஷ்மணன், முத்துக்காளை, கிங்காங், லக்ஷ்மணன், பயில்வான் ரங்கநாதன், போண்டாமணி, வெங்கல்ராவ் மற்றும் ஏராளமான நடிகர்கள்வருகை தந்தது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.