பள்ளியில் படிக்கும் பிள்ளைகளைச் சீரழித்த சிவசங்கர் பாபாவைக் கைது செய்ய வேண்டும் – வ.கௌதமன்

பள்ளியில் படிக்கும் பிள்ளைகளைச் சீரழித்த சிவசங்கர் பாபாவைக் கைது செய்ய வேண்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வ.கௌதமன் கோரிக்கை.

கல்வியின் பெயராலும் ஆன்மீகத்தின் பெயராலும் தன்னை “பரமாத்மா” என்றும், “பகவான் கிருஷ்ணன்” என்றும் சொல்லிக் கொண்டு, தனது பள்ளியில் ஆறாவது, ஏழாவது படித்துக் கொண்டிருக்கும் பிஞ்சுப் பெண்பிள்ளைகளை அழைத்து, தன்னோடு இணங்கினால் தெய்வீக சக்தி கிடைக்கும் என்றெல்லாம் மயக்க வார்த்தைகள் பேசி, எண்ணற்ற பிள்ளைகளைச் சூறையாடிய சிவசங்கர் பாபா எனும் காட்டுமிராண்டியை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என, தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள்,
பத்மா சேஷாத்ரி ராஜகோபாலனின் கொடூரத்தை கேள்விப்பட்டே தூக்கம் தொலைத்த நிலையில், சிவசங்கர் பாபாவின் குரூரத்தைக் கேள்விப்படும்போது ஈரக்குலை நடுங்குகிறது. இரத்தம் சூடேறிக் கொதிக்கிறது. பள்ளியில் படிக்கும் அழகான பெண் பிள்ளைகளுக்கு “கோபிகா” என்று பெயரிட்டு, அவர்களைத் தனியறைக்கு அழைத்து, அவர்களுக்கு மயக்க சாக்லெட் கொடுத்தும், சாராய வகைகளைக் குடிக்க வைத்தும், பரிசுப்பொருட்களை அடுக்கித் தந்தும் தனது இச்சைக்கு இணங்க வைக்குமாம் அந்த பிசாசு. மறுக்கும் பிள்ளைகளைப் பள்ளியை விட்டுத் துரத்தி விடுவேன் என்று மிரட்டி சீரழிக்குமாம் அந்த 73 வயதான வக்கிர பேய்.

பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளின் வாக்குமூலங்கள், ஒலியலைகளாக வந்தபிறகும், சிவசங்கர் பாபா மீது, தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? காவல்துறை ஏன் இன்னும் தனது கடமையைச் செய்யவில்லை? உடனடியாக இந்தக் காட்டுமிராண்டி மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தைப் பாய்ச்சி, கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்.

பத்மா சேஷாத்ரி ராஜகோபாலன், 300க்கும் மேற்பட்ட பிள்ளைகளைச் சூறையாடி இருப்பதாக, காவல்துறையின் மூன்றுநாள் விசாரணையில் 100 பக்கம் வாக்குமூலமாக தந்திருக்கிறார். சில மாணவிகளை மிரட்டியும் சிலரை சினிமாவுக்கும், விடுதிக்கும் அழைத்துச்சென்று சீரழித்து, அதில் கர்ப்பமான சில மாணவிகளை அவர்களின் பெற்றோர்களுக்கே தெரியாமல் கருக்கலைப்பு செய்ததாகவும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

பத்தாண்டுகளுக்கு மேலாக அந்த கொடூரன் செய்த செயல்கள் அந்தப் பள்ளி நிர்வாகத்திற்குத் தெரியாமலா போயிருக்கும்? அந்த காமுகன் செய்த அத்தனை குரூரத்திற்கும் சாதியின் பெயரால் அந்த பள்ளியும், அவர் சார்ந்த சில கூட்டங்களும் அவரை பாதுகாக்க நினைப்பதுதான் நடந்து முடிந்த வன்முறைகளுக்கு எல்லாம் மேலான வன்முறை. அதேபோன்று தடகள பயிற்சியாளர் நாகராஜன் என்கிற ஓநாயையும் விடவே கூடாது.

இதுபோன்ற வன்முறை நிகழ்வுகளை சாதி, மதத்தின் பெயரால் மறைக்க நினைக்காமல்,
பத்மா சேஷாத்ரியாக இருந்தாலும் சரி, தற்போது விசாரணை வளையத்திற்குள் வந்திருக்கும் செயின்ட் ஜார்ஜ் பள்ளியாக இருந்தாலும் சரி, மனிதத்தின் அடிப்படையில் யாருடைய, எந்த மதத்தின் நிறுவனமாக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.

நாம் எந்தக் காலத்தில் வாழ்கிறோம்? இப்படி மன்னிக்க முடியாத குரூரங்கள் வேறு எந்த நாட்டிலாவது நடந்திருந்தால் இவர்களோ, இவர்கள் நடத்தும் நிறுவனங்களோ இப்படி பாதுகாப்பாக இருந்திருக்குமா? இந்த வேகமும் கோபமும் பொதுமக்களிடம் பெருகுவதற்கு முன்பு, சட்டம் தன் கடமையை ஆற்ற வேண்டும். தமிழ்நாடு அரசு, நீதியை நிலைநாட்ட இந்த காட்டுமிராண்டிகளையும் இவர்களுக்குத் துணை நிற்கின்ற கூட்டங்களையும் ஈவு இரக்கமின்றி தண்டிக்க வேண்டும். பள்ளி பிள்ளைகளைச் சீரழிப்பவன், அவன் எவனாக இருந்தாலும் அவனுக்கு மரண தண்டனை என்கிற சிறப்பு சட்டத்தை, வருகின்ற சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே உறுதித்தன்மையோடு உருவாக்க வேண்டும். இதற்கு மேலும் நம் வீட்டுப் பிள்ளைகள் சிதையாமல் இருக்க சம்பந்தப்பட்ட இந்த கல்வி நிறுவனங்களை அரசுடமையாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசினை தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

*வ. கௌதமன்*
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி,
“சோழன் குடில்”
07.06.2021.