இயற்கை விவசாயி நெல் ஜெயராமனுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும் – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயற்கை விவசாயி நெல் ஜெயராமனுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் , உடல் நலக்குறைவின் காரணமாக சிகிச்சை பெற்று வரும் இயற்கை விவசாயி நெல் ஜெயராமனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நெல் ஜெயராமன் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழக முதல்வர் அறிவுறுத்தல் படி அவரை நேரில் சந்தித்து, உடல்நலம் குறித்து விசாரித்தோம். அவருக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என முதல்வர் சொல்ல சொல்லி இருக்கிறார் அதையும் தெரிவித்தோம்.

மேலும் இந்த செய்தி தனக்கு ஊக்கமளிப்பதாக அவர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி அவருக்கு என்ன மாதிரியான உதவி வேண்டுமோ அதை அரசு செய்வதாக அவரின் குடும்பத்திடம் தெரிவித்துள்ளோம்.

இந்நிலையில் தற்போது அவரின் உடல் நலம் சீராக உள்ளது என்றும், அவர் அனைவரிடமும் நன்றாக பேசி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.