வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய படம் “கொல்லாமை”

சமீபத்தில் வெளிவந்து, வெற்றிப் பெற்ற அடங்காமை திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் மைக்கேல் ஜான்சன் மற்றும் டென்மார்க்கை சேர்ந்த பொன்.புலேந்திரன் இருவரும் இணைந்து வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய படம் “கொல்லாமை”!

இதில் அடங்காமை படத்தில் ஹீரோவாக நடித்த சரோன் கதாநாயகனாகவும், பல மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்த பாருகிரீஷ் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் முத்துராமன், சாப்ளின் பாலு, முத்துக்காளை, மும்பை அழகி ஷிமான்சி, மீராராஜ், நடிகர் நாசரின் தம்பி ஜவகர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்!

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவுடன் இயக்கி, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பி.ஜி.வெற்றிவேல். சமுத்திரக்கனி நடித்த எட்டுத்திக்கும் பற’ படத்திற்கு இசையமைத்த எம்.எஸ். ஶ்ரீகாந்த இசையமைக்கிறார். தீனா, ஆர்.ஜெகதீஷ் ஆகியோர் நடனம் அமைக்க்கிறார்கள். கே.வி.செந்தில் எடிட்டிங்கை கவனிக்கிறார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்!

ஒரு ஜாதிக் கட்சியின் தலைவர் மகள் மாற்று ஜாதிக்காரனை காதலித்து, திருமணம் செய்து கொள்ள நண்பர்களின் துணையோடு ஊரைவிட்டு ஓட, அவனை கொன்று விட்டு தன் மகளை அழைத்து வரச்சொல்லி, தன் தம்பிக்கு கட்டளையிடுகிறார் ஜாதிக்கட்சி தலைவர்.

காதலர்கள் தன் நண்பர்களோடு கொடைக்கானல் செல்வதை அறிந்த பெண்ணின் சித்தப்பா, தன் அடியாட்களோடு அவர்களை துரத்திச் செல்கிறார். இதையறிந்த காதல் ஜோடியும், நண்பர்களோடு காட்டுக்குள் இறங்கி, நாலாபுறமும் பிரிந்து விடுகிறார்கள். பெண்ணின் சித்தப்பா தன் அடியாட்களோடு அவர்களைத்தேட, அடியாட்கள் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள்!

இந்த கொலைகளை செய்தது யார், எதற்காக கொல்லப்படுகிறார்கள் என்பதை சஸ்பென்ஸோடு திகில் கலந்து, விறுவிறுப்பாக இயக்கி, ஒளிப்பதிவும் செய்து, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பி.ஜி.வெற்றிவேல்.

“கொல்லாமை” படத்தின் படப்பிடிப்பு திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, கொடைக்கானல், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் விரைவில் நடைபெற உள்ளது என தயாரிப்பார்கள் மைக்கேல் ஜான்சன் மற்றும் டென்மார்க் பொன்.புலேந்திரன் இருவரும் கூறினார்கள். தொடர்ந்து பல புதிய இயக்குனர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்துவதே தங்களின் நோக்கம் என தயாரிப்பார்கள் இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர்!