தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 6 வயது பெண் குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை

தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட
6 வயது பெண் குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று
அறுவை சிகிச்சை: காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை-
ரெலா மருத்துவமனை இணைந்து சாதனை

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையில்
ரெலா மருத்துவமனை செய்த முதல் வெற்றிகரமான எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை

பொருளாதார பிரச்சினையால் பாதிக்கப்பட்ட அந்த பெண் குழந்தைக்கு மறுவாழ்வு அளித்த ரெலா மருத்துவமனை

சென்னை, ஜன.
18 வயதுக்கு கீழான குழந்தைகளுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை வழங்கும் காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையும் உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறந்து விளங்கும் ரெலா மருத்துவமனையும் இணைந்து முதன்முறையாக 6 வயது குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளன.

இது குறித்து ரெலா மருத்துவமனையின் குழந்தைகளுக்கான எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை நிபுணரும் டாக்டருமான தீனதயாளன் கூறுகையில், சித்தூரைச் சேர்ந்த இந்த பெண் குழந்தைக்கு பிறக்கும்போதே தலசீமியா நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக அவளது மேல் உதடு மற்றும் அண்ணத்தில் குறைபாடு இருந்தது. இந்த நிலையில் அவளுக்கு 1 வயதில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அதனைத் தொடர்ந்து ரத்த மாற்று சிகிச்சை ஆதரவுடன் இருந்து வந்தாள். மேலும் இந்த குழந்தை உயிர் வாழ 3 வாரங்களுக்கு ஒரு முறை ரத்த மாற்று சிகிச்சை என்பது கட்டாயமானதாக இருந்தது. இந்த நோய் காரணமாக உடலில் சேரும் அதிக அளவிலான இரும்பு சத்தை அகற்ற அவளுக்கு மருந்துகளும் தேவைப்பட்டன. போதிய பணம் இல்லாத காரணத்தால் அவளது குடும்பத்தால் அவளது மருத்துவ சிகிச்சையை கவனிக்க முடியவில்லை. இந்த நிலையில் அந்தக் குழந்தை இலவச எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்காக காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அவளுக்கான நிதி உதவிகளை கூட்டு நிதி வழங்கும் அமைப்பான எம்ஐஎல்ஏபி மற்றும் சைல்டு டிரஸ்ட் தலைவர் ஏ.சி. முத்தையாவின் மனைவி தேவகி முத்தையா ஆகியோர் வழங்கினர். இந்த நிலையில் அவளுக்கு இம்மருத்துவமனையில் சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ஸ்டெம் செல் சேகரிப்பு மற்றும் அதற்கான செயலாக்கத்தை ரெலா மருத்துவமனை மேற்கொண்டது. பேராசிரியர் முகமது ரெலாவின் முழு ஆதரவு மற்றும் வழிகாட்டுதலால் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், குழந்தைகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை செய்வதன் மூலம் எங்களது மருத்துவமனை ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. பல நல்ல உள்ளம் படைத்த நன்கொடையாளர்கள் காரணமாக இது சாத்தியப்பட்டுள்ளது. எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கு எங்களுக்கு உதவிடும் வகையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்கும் ரெலா மருத்துவமனையுடன் நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். டாக்டர் தீனதயாளன் உதவியுடன் இந்த எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இது குறித்து ரெலா மருத்துவமனை தலைவரும் நிர்வாக இயக்குனருமான பேராசிரியர் முகமது ரெலா கூறுகையில், குழந்தைகளுக்கு தன்னலமற்ற மருத்துவ சேவையை வழங்கி வரும் காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனைக்கு எப்போதும் என் இதயத்தில் ஒரு இடம் இருக்கிறது. இம்மருத்துவமனை கடந்த பல ஆண்டுகளாக பல குடும்பங்களின் நம்பிக்கையின் சின்னமாக விளங்கி வருகிறது. உள்கட்டமைப்பைத் தவிர, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு நல்ல பலனைத் தர அதிக அளவு நிபுணத்துவம் தேவைப்படுகிறது. அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் குழந்தைகளுக்கான கல்லீரல், சிறுநீரகம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையை எங்கள் மருத்துவமனை மூலம் நாங்கள் வழங்கி வருகிறோம். காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையுடன் இணைந்து எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையை மேற்கொள்ள எங்கள் மருத்துவமனை முழு மனதுடன் ஒப்புதல் அளித்துள்ளது. ஏனெனில், இதன் காரணமாக அதிக அளவிலான குழந்தைகள் பயன்பெறுவார்கள். மேலும் குழந்தைகளுக்கான உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ள எந்தவொரு தன்னார்வ தொண்டு நிறுவனம் அல்லது அரசு அமைப்புகளுக்கும் இதே ஆதரவை நாங்கள் வழங்குவோம் என்று தெரிவித்தார்.
ரே ஆப் லைட் பவுண்டேஷனின் தாராளமான நன்கொடை காரணமாக எச்.டி. பரேக் அறக்கட்டளையால் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை பிரிவு காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையில் துவக்கப்பட்டுள்ளது என்று அம்மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி சந்திரமோகன் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், வருங்காலத்தில் இதுபோன்ற எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை நிதியளிப்பு முகவர்கள் மற்றும் எங்கள் அறக்கட்டளை தலைவர் ஏ.சி. முத்தையா ஆகியோரின் உதவியுடன் எங்கள் மருத்துவமனை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.