ஸ்ரீ தேவியின் ரத்த மாதிரியில் ஆல்கஹால் – தடவியல் சோதனையில் தகவல்

நடிகை ஸ்ரீ தேவி கடந்த வாரம் தனது உறவினரின் திருமணத்திற்கு குடும்பத்தினருடன் துபாய் சென்று இருந்தார். திருமணம் முடிந்து அவரது கணவர் போனி கபூர் மற்றும் மூத்த மகள் ஜான்வி கபூர் இருவரும் மும்பை திரும்பிவிட்டனர். ஸ்ரீதேவியும் தனது இரண்டாவது மகளும் துபாயில் தங்கிவிட்டனர். ஷாப்பிங் செல்ல வேண்டும் என்று கூறி துபாயில் உள்ள ஜுமைரா எமிரேட்ஸ் ஹோட்டலில் ஸ்ரீ தேவி தங்கிவிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், போனி கபூர் தனது மனைவி ஸ்ரீ தேவிக்கு “ஆச்சரிய விருந்து” அளிப்பதற்காக மீண்டும் சனிக்கிழமை துபாய் சென்றார்.

இருவரும் தங்களது அறையில் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்துள்ளனர். பின்னர் ஸ்ரீ தேவி குளியலறைக்குள் சென்றுள்ளார். 15 மிநிடங்கள் ஆகியும் வெளியே வராததால், கதவை அவரது கணவர் போனி கபூர் தட்டியுள்ளார். அப்போதும், கதவு திறக்காததால், அவரது நண்பரை அழைத்து கதவை உடைத்து திறந்துள்ளனர். அப்போது ஸ்ரீ தேவி பாத் டப்பில் எந்த உணர்வும் இல்லாமல் கிடந்துள்ளார். இதையடுத்து, அவர் மாரடைப்பில் இறந்தார் என்ற செய்தி வெளியானது. இந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு, தவறுதலாக பாத் டப்பில் விழுந்து உயிழந்தார் என்றும், அவரது ரத்த மாதிரியில் ஆல்கஹால் இருந்ததும் தடவியல் சோதனையில் தெரிய வந்து இருப்பதாக கலீத் டைம்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.