திலீப்புக்கு ஜாமீன் மறுப்பு

கேரளாவில் ஓடும் காரில் பிரபல நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.  முன்னதாக இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அதன் பிறகு அங்கமாலி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி, திலீப் ஆலுவா சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே திலீப்புக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவரது வக்கீல், அங்கமாலி கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, திலீப்புக்கு ஜாமீன் வழங்க மறுத்தது. போலீஸ் காவல் முடிந்த பின்பு போடப்பட்ட ஜாமீன் மனுவையும் கோர்ட்டு நிராகரித்தது. இதையடுத்து திலீப்புக்கு ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் அவரது வக்கீல் மனுத்தாக்கல் செய்தார்.

திலீப் தரப்பு மற்றும் போலீஸ் தரப்பு வாதங்களை கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஜாமீன் மனு குறித்த விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று காலை கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.  மனுவை விசாரித்த நீதிபதிகள், திலீப்பின் ஜாமீனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். அங்காமாலி நீதிமன்றம் அளித்துள்ள நீதிமன்றக் காவல் நாளையுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.