“கனா” எல்லோராலும் பாராட்டப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது – இணை தயாரிப்பாளர் கலையரசு

சினிமாவில் “இன்ஸ்பிரேஷன்ஸ்” என்பதே ஒரு தனி ஜானர். அந்த விஷயங்களை கொண்டிருக்கும் எந்த ஒரு படமும் மக்களிடம் சிறப்பான வரவேற்பை பெறும் என நான் சொல்வேன். எங்கள் தயாரிப்பான “கனா” எல்லோராலும் பாராட்டப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. வணிக வெற்றியை விட, தியேட்டர்களில் தங்கள் படங்களை ரசிகர்கள் முழுமையாக அனுபவிப்பதை பார்ப்பது தான் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும். ரசிகர்களின் பல்ஸை அருண்ராஜா  காமராஜ் கச்சிதமாக தெரிந்து வைத்திருக்கிறார். திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பு என் எதிர்பார்ப்புகளை விஞ்சிவிட்டன” என்கிறார் இணை தயாரிப்பாளர் கலையரசு.
அவர் தற்போது அனுபவிக்கும் ஒரு எதிர்பாராத ஆச்சரியம் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். அவத் கூறும்போது, “ஒரு திரைப்படம் திரையரங்குகளில் நன்றாக ஓடும்போது, வர்த்தக ரீதியாக வெற்றிகரமாக கருதப்படும். ஆனால் பல பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சிறப்பு திரையிடலுக்காக எங்களை அணுகுவதை நான் நினைத்து கூட பார்க்கவில்லை. மேலும், ரசிகர்களின் வாய்வழி செய்தி மூலம் மிகப்பெரிய விளம்பரமாகி, திரையரங்குகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் இன்னும் நல்ல தரமான  பொழுதுபோக்கு படங்களை வழங்க இது ஊக்கமாக இருக்கிறது” என்றார்.
மேலும், மொத்த குழுவுக்கும் நன்றி தெரிவித்து பேசும்போது, “ஐஸ்வர்யா ராஜேஷ் ஏன் ஒரு பிரபலமான நடிகையாக இருக்கிறார் என்பதை கனா மறுபடியும் நிரூபித்திருக்கிறது. அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரங்கள் மற்றும் திரைப்படங்கள் எப்போதும் யதார்த்தத்துடன் மிக நெருக்கமாக இருக்கிறதுது. ‘கனா’ மூலம் அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறார். அறிமுக திரைப்படம் என்றாலும் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார் தர்ஷன். மேலும் அவருடைய காட்சிகளை ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்பதை பார்க்க  இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
சத்யராஜ் சார் பற்றி நான் வேறு என்ன சொல்ல முடியும்? தன் மாயாஜால நடிப்பால் படத்தின் முதுகெலும்பாக இருந்து படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறார். கனாவில் தன் இசையால் ரசிகர்களிம் கவனத்தை ஆரம்பம் முதலே ஈர்த்திருந்தார் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ். தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்கும் அனுபவத்தை வழங்கிய ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் மற்றும் மிக வேகமாக படத்தை தொகுத்த ரூபன் ஆகியோரை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. இந்த திரைப்படத்தை சிறப்பாக உருவாக்க நிபந்தனையற்ற ஈடுபாட்டுடன் அவர்கள் கொடுத்த உழைப்பு தான் இப்போது அழகான படத்தை கொடுத்திருக்கிறது” என்றார்.