அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற தாய்மார்களின் கவனத்திற்கு

அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தைகள் பெற்ற பெண்கள், புரோபயாடிக் உணவுகள் உட்கொள்ள வேண்டியது அவசியம். இதில் இருந்து கிடைக்கும் நல்ல பாக்டீரியா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து ஆரோக்கியத்தை வலிமையடைய செய்கிறது. தயிர் ஓர் சிறந்த புரோபயாடிக் உணவு. அறுவைச் சிகிச்சை செய்ததால், கீறல்கள் இருக்க வாய்ப்புகள் இருக்கும். எனவே, அந்த இடத்தில் அதிக அழுத்தம் தராமலும், தொற்று ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். முக்கியமாக குளிக்கும் நீரினை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அறுவைச் சிகிச்சை என்பதால் படுக்கையில் படுத்துக் கொண்டே இருக்காமல், நேரம் கிடைக்கும் போது கொஞ்ச நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இது உடலில் இரத்த கட்டிகள் உண்டாகாமல் இருக்க உதவும். அறுவைச் சிகிச்சை செய்த பெண்கள் ஊட்டச் சத்துக்களில் நிறைய கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக வைட்டமின் சி மற்றும் புரதம் நிறைந்த உணவுகள். இவை, தசை வலிமை அடைய வெகுவாக உதவும் உணவுகளாகும். பிரசவத்திற்கும், முன்னும், பின்னும் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. முக்கியமாக அறுவைச் சிகிச்சை செய்த பெண்கள் உட்கார்ந்து எழுந்து மலம் கழிக்க முயற்சிக்கும் போது அழுத்தம் அதிகரித்து இரத்த கசிவு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. உணவில் நார்ச்சத்து உணவுகள் அதிகம் எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல் உண்டாகாமல் தடுக்க முடியும். தாய்பால் தருவது குழந்தைக்கு மட்டுமின்றி, தாய்க்கும் நல்லது. எனவே, குறைந்தபட்சம் ஆறு மாதத்தில் இருந்து 1 ஆண்டு வரைக்குமாவது தாய்பால் கொடுக்க வேண்டும். அதிக எடை கொண்ட பொருட்களை தூக்க வேண்டாம். இது அறுவைச் சிகிச்சை செய்த இடத்தில் அதிக வலியை உண்டாக்கும். உடற்பயிற்சி கூடத்திற்குச் செல்லும் பெண்கள், அறுவைச் சிகிச்சை செய்த சில மாதங்கள் வரை க்ரஞ்சஸ் பயிற்சி செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்.