பி.பி.சி. தமிழோசை வானொலி ஒலிபரப்பு ஏப்ரல் 30ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது

பி.பி.சி. வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்களை இங்கிலாந்து அரசு நடத்தி வருகிறது. 1927ஆம் ஆண்டு பி.பி.சி. வானொலி இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது. முதலில் ஆங்கிலத்தில் ஒலிபரப்பை தொடங்கிய இந்த வானொலி பின்னர் பல்வேறு மொழிகளிலும் ஒலிபரப்பியது. தற்போது 27 பிராந்திய மொழிகளில் ஒலிபரப்புகளை செய்கிறது. இதில், தமிழோசை என்ற தமிழ் ஒலிபரப்பும் ஒன்றாகும்.

தமிழ் ஒலிபரப்பு 1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சிற்றலை வரிசையில் ஒலிபரப்பு செய்யப்பட்டு வந்தது. இதில் செய்திகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளும் ஒலிபரப்பப்பட்டன. பி.பி.சி. செய்திகள் மிகுந்த நம்பகத்தன்மையுடன் இருந்ததால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இதை விரும்பி கேட்டனர். தற்போது டி.வி., இணையதளம் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் வந்து விட்டதால் வானொலி ஒலிபரப்பை கேட்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.

இதனால் பல பிராந்திய மொழி ஒலிபரப்புகளை பி.பி.சி. நிறுத்தி விட்டது. இப்போது பி.பி.சி. சிற்றலை தமிழ் ஒலிபரப்பை நிறுத்த முடிவு செய்துள்ளது. வருகிற 30ஆம் தேதியுடன் இந்த ஒலிபரப்பு நிறுத்தப்படும். 76 ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வந்த தமிழோசை ஒலிபரப்பு நிறுத்தப்படுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும், இணைய தளம் மூலம் தமிழோசை தொடர்ந்து ஒலிபரப்பப்படும் என்று பி.பி.சி. அறிவித்துள்ளது. இலங்கையில் மட்டும் தனியார் வானொலியுடன் சேர்ந்து எப்.எம். ஒலிபரப்பில் 5 நிமிட பி.பி.சி. செய்திகள் ஒலி பரப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.