எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி திரட்ட மராத்தான் முயற்சியை தொடங்கி உள்ள அரிஸ்டோகிராட் ஃபவுண்டேஷன்

எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. இருப்பினும் இந்தியாவில் ஆண்டுதோறும் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் தாய்மார்கள் வரை எச்.ஐ.வி-யால் பாதிக்கப்படுவதாக யூனிசெப் அறிக்கை தெரிவிக்கிறது. அவர்களில் 30% குழந்தைகள் எச்.ஐ.வி. பாஸிடிவாகவே பிறக்கிறார்கள்.

யுனிசெப் கணக்கீட்டின்படி இந்தியாவில் ஆண்டுதோறும் 2.22 லட்சம் குழந்தைகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப எய்ட்ஸ் நோயும் பெருகிவருகிறது. மக்கள் மத்தியில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு இருந்தாலும், எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் எய்ட்ஸ் நோய் தாக்கப்பட்டு பிறப்பது சோகத்தின் உச்சம்.

எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சமூகத்தால் புறக்கணிக்கப்படுவது அதைவிட வேதனை அளிக்கும் செய்தியாக உள்ளது. எய்ட்ஸ் நோய் தாக்கப்பட்டு சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ செலவினங்களை ஈடுகட்டும் வகையில் திரு. சந்தோஷ் மனோஜ் அவர்களால் தொடங்கப்பட்ட சோர்க்ஸி எண்ட்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற (Soarxi Enterprise private limited) நிறுவனம் மற்றும் திரு. அசாரியா சாமுவேல் அவர்களின் அரிஸ்டோகிராட் ஃபவுண்டேஷன் (Aristocrat Foundation) நிறுவனமும் இணைந்து தங்களுடைய முதல் முயற்சியை தொடங்கி உள்ளது.  

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நிதி திரட்டுவதற்கான மராத்தான் போட்டி சென்னையில் 2019 மார்ச் 10-ம் தேதி நடைபெற உள்ளது. மராத்தான் போட்டி குறித்த அறிவிப்பும் பத்திரிகையாளர் சந்திப்பும் சென்னை சவேரா ஓட்டலில் உல‌க‌ aids தினமான இன்று (டிசம்பர் 1) நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரைநட்சத்திரம் பிரஷாந்த் மற்றும் தடகள வீராங்கனை வினோலி ராமமூர்த்தி, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டிவரும்  டாக்டர் மனோரமா (ches-community health education society) உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய நடிகர் பிரஷாந்த், எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளை அனைவரும் அரவணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

எச்.ஐ.வி. பாதித்த குழந்தைகளுக்காக இவர்கள் பங்களிப்புச் செய்கிறார்கள்: 

சமூக ஆரோக்கிய கல்விக் குழு (CHES), பிரத்யஷா கருணை இல்ல வட்டம், சூழல் அறிவியல் அறக்கட்டளை, ஷெல்டர் ஹோம், மெர்ஸி ஹோம், நடிகர் பிரஷாந்த், பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, நடிகர் ஆரி, விடியல் அறக்கட்டளை, தன்னார்வலர்கள், வினோலி ராமலிங்கம், ஓட்டப்பந்தய வீரர்கள் உள்ளிட்டோர் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக பங்களிக்க உள்ளனர்.

மாரத்தான் போட்டியில் பங்கேற்க ஆர்வம் உள்ள தன்னார்வலர்கள், வீரர்கள், நன்கொடையாளர்கள் www.AristocratMarathon.com  வலைத்தளத்திற்கு சென்று பதிவு செய்யலாம். எச்.ஐ.வி. பாதித்த குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டி அன்பு செலுத்தலாம்.

 மராத்தான் தேதி – மார்ச் 10  2019 

தன்னலமற்ற சேவையே மனிதநேயம்… மனிதநேயமே கடவுள் சேவை…