புட் கடலை போட்ட பிக்பாஸ் புகழ் தர்ஷன்

சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் பல்லேடியம் மாலின் உணவு விடுதியில், புட் கடலை கஃபேவை பிக்பாஸ் புகழ் தர்ஷன் திறந்து வைத்தார். கோயம்புத்தூரில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் புட்கடலை கஃபே, சென்னையில் தனது முதல் கிளையை  இன்று தொடங்கியது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிக்பாஸ் புகழ் தர்ஷன் கடையினை திறந்து வைத்தார், உடன் புட்கடலை நிர்வாகிகள் இருந்தனர். 
 
வாரத்தின் 7 நாட்களிலும், காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் இந்த கஃபே வேர்க்கடலையில் நிபுணத்துவம் பெற்றது. மேலும், பல சுவையான மற்றும் தனித்துவமான வகைகளில்  வேர்க்கடலை உணவுகளைக் கொண்டுள்ளது. இதில் பிக் பாப், பன்னி சோவ், வேர்க்கடலை வெண்ணெய், ஜெல்லி சாண்ட்விச்கள், வேர்க்கடலை வெண்ணெய் ஷேக்ஸ்மற்றும் இயற்கை ஐஸ் கிரீம்கள் ஆகியவை அடங்கும்.
 
புட் கடலை கஃபே நிறுவனர்கள் ஹரிஷ், செந்தில் மற்றும் நிஷா ஆகியோர் 6 மாதங்களுக்கு முன்பு கோவையில் ஆரம்பித்தது என்றும், அது மக்களிடத்தில் எவ்வகையில் நாட்டத்தை ஏற்படுத்தியது என்றும் பகிர்ந்து கொண்டனர். அவர்களது 30க்கும் மேற்பட்ட உணவு வகைகள் ஆரோக்கியமானவை, சுவையானவை மற்றும் விலை குறைந்தவை என்றும் அவர்கள் தெரிவித்தனர். அவர்களுடன் இணைந்து சி.கே.குமாரவேலும், கோயம்புத்தூர் சார்ந்த, இந்த இளம் தொழில்முனைவோர் மீது தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.  மேலும் புதிய உணவு மற்றும் புதிய அனுபவத்தை மக்கள் தேடுவதால் புதுமையின் அவசியத்தையும் எடுத்துரைத்த அவர், அதனை புட்கடலை வழங்கும் எனத் தெரிவித்தார். 
 
இவ்விழாவின் ஒரு பகுதியாக,  பிக் பாஸ் நட்சத்திரம் தர்ஷனுடன் வேடிக்கையான உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய தர்ஷன் முதலில் புட்கடலை என்ற பெயரே நன்றாக இருப்பதாகவும், இந்த கடலை மரபு மாற்றம் செய்யப்படவில்லை என்பதால் உடலுக்கு மிகவும் நல்லது என்றார். 
 
மேலும், பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் நிறைய கடலைபோட்டிருப்பதாகவும், ஆனால் எதுவும் நிறைவேறவில்லை எனவும் கூறிய தர்ஷன், தன்னுடைய காதல் கதையை பகிர்ந்து கொண்டார். தனக்கு வாழ்க்கைத் துணையாக வருபவர் ஒரு வாயாடியாகவும், நகைச்சுவை உணர்வுடன் இருந்தாலும் மட்டுமே போதும் எனவும் அவர் கூறினார். 
 
தொடர்ந்து பேசிய தர்ஷன், தனக்கு சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆசை முதலில் இல்லை என்றும், பின்னர் சிறிது  துளிர்விட்டதாகவும் கூறினார். தனக்கு கமல் ஒரு கண் என்றால், ரஜினி மற்றொரு கண் என்ற தர்ஷன், பிரபல நடிகை தமன்னாவுடன் கடலை போட ஆசை எனக் கூறினார். மேலும், பார்த்தவுடன் காதலில் தனக்கு நம்பிக்கை இருக்கிறது, என்றாலும் புரிதல் என்பது முக்கியம் எனக் கூறிய தர்ஷன், காதல் காட்சிகளைவிட ஆக்சன் காட்சிகளில் நடிப்பதிலேயே தனக்கு விருப்பம் இருப்பதாகக் கூறினார். மேலும், புட்கடலை நிறுவனர்களின் சுவையான, சத்தான உணவுகளைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு தனது பாராட்டினைத் தெரிவித்தார்.