ஆம் ஆத்மி, தெலுங்கு தேசம் கட்சிகள் வெற்றி

பாவனா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆந்திர பிரதேசம் நந்தியால் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இன்று காலை பாவனா தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது, காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. இதன்பிறகு நிலை மாறி ஆம் ஆத்மி முன்னிலை பெற்றது.

 கடைசியில், ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட ராம் சந்தர் வெற்றி பெற்றுள்ளார். இவர் மொத்தம் 59,886 ஓட்டுகள் பெற்றுள்ளார். பாஜக 35,834 ஓட்டுகளுடன் இரண்டாவது இடத்தையும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 31,919 ஓட்டுகளுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றனர். நோட்டாவுக்கு 1413 ஓட்டுகள் விழுந்துள்ளது. இந்த வெற்றியின் மூலம், டெல்லியில் தன்னுடைய செல்வாக்கை அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் நிரூபித்துள்ளார்.
 அதே போல் ஆந்திரப்பிரதேசம் நந்தியால் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பூமா பிரம்மானந்த ரெட்டி வெற்றி பெற்றுள்ளார். இவர் எதிர்த்து போட்டியிட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மோகன் ரெட்டியை, பிரம்மானந்த ரெட்டி 27,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.