ரூ.9 லட்சம் மதிப்பிலான ரூ.500, ரூ.2000 கள்ள நோட்டுகள் வங்கியில் டெபாசிட் செய்தவர் கைது

தெலுங்கானா மாநிலம் மெட்சால் மாவட்டத்தில் உள்ள மால்கஜ்கிரி பகுதியில் உள்ள ஒரு வங்கியில் இன்று அப்பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் சுமார் 9.90 லட்சம் மதிப்பிலான மதிப்பிலான புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை தனது கணக்கில் செலுத்துவதற்காக வந்துள்ளார். பணத்தை வங்கியின் காசளர் பரிசோதித்த போது அவை அனைத்தும் போலி நோட்டுக்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து, வங்கி அதிகாரிகள் போலீசாரை அங்கு ரகசியமாக வரவைத்தனர்.

வங்கிக்கு விரைந்து சென்ற போலீசார் கள்ள நோட்டுகள் டெபாசிட் செய்ய வந்த நபரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். புதிதாக வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தது என்றும் அவை போலியாக அச்சடிப்பது கடினம் எனவும் அரசின் சார்பில் சொல்லப்பட்டு வந்த நிலையில், ரூ.9.90 லட்சம் மதிப்பில் கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.