மிக புதுமையான முறையில் உருவாகியுள்ள ‘போதை ஏறி புத்தி மாறி’ டீசர்

இந்த நாட்களில், ‘டீசர்’ என்பது ஒரு படத்தின் பிரதான அடையாளமாக மாறி விட்டது. அதனால் அதை மிகச் சிறந்த முறையில் கொடுக்க கடின உழைப்பும், மிகப்பெரிய முயற்சிகளும் தேவைப்படுகின்றன. ஒரு நிமிடத்திற்கும் குறைவான கால அளவில் ஒரு படத்தின் கதையை பற்றி சொல்ல வேண்டி இருக்கிறது. சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் பார்வையாளர்கள் என்ற முக்கிய காரணிகளும் தற்போது இருப்பதால், ‘முதல் தோற்றத்திலேயே அனைவரையும் ஈர்க்க வேண்டும்” என்ற ஒரு கோட்பாடு உள்ளது. 45 நொடிகள் ஓடும் இந்த போதை ஏறி புத்தி மாறி படத்தின் டீசர் மிகச்சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டு, உடனடியாக நேர்மறையான வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குனர் கேஆர் சந்துரு கூறும்போது, “முதலில், எங்கள் டீசரை அறிமுகப்படுத்த முழு மனதுடன் ஒப்புக் கொண்ட சூர்யா சாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இது போன்ற ஒரு சிறிய படத்தை ஆதரிக்க அவர் ஆர்வம் காட்டுவாரா என்ற சந்தேகம் இருந்தது, ஆனால் அவர் எங்களை மிகப்பெரிய வியப்பில் ஆழ்த்தினார். இது சமூக ஊடகப் பக்கத்தில் சாதாரண வார்த்தைகளை பற்றியது அல்ல, இந்த டீசரை பார்த்து தனிப்பட்ட முறையில் மனதாரால் பாராட்டினார். 

டீசரை தொகுத்து உருவாக்கிய விதம் பற்றி அவர் கூறும்போது, “டீசர்கள் ‘ஒரு திரைப்படத்தை ஊக்குவிப்பதில் மிக முக்கிய அங்கமாக மாறிவிட்டன என்பது தெளிவாகத் தெரிகிறது. நல்ல கதையம்சம் உள்ள படங்களில், பெரிய நடிகர்களோ அல்லது கலைஞர்களோ இல்லாத போதும், டீசர்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை மிகப்பெரிய அளவில் ஈர்த்திருக்கும் பல நிகழ்வுகளை நாம் சந்தித்திருக்கிறோம். இதுவே போதை ஏறி புத்தி மாறி படத்தின் டீசரை முன்வைப்பதற்கான உற்சாகத்தை எங்களுக்கு வழங்கியது. டீசரை 45 நொடிகள் கால அளவில் வழங்க முடிவு செய்தபோது, படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களையும் டீசரில் கொண்டு வருவதை நாங்கள் கடுமையான சவாலாக எடுத்துக் கொண்டோம். எனவே, டீசரின் முதல் சில விநாடிகளுக்கு நாயகனை (தீரஜ்) மட்டுமே காட்ட முடிவு செய்தோம், பின்னர் அடுத்த பாதியில் மீதமுள்ள கதாபாத்திரங்களை காட்ட நினைத்தோம். டீசர் பார்த்த பலரும் நாங்கள் சொல்ல நினைத்ததை சரியாக புரிந்து கொண்டிருப்பதோடு, எங்களை வெகுவாக பாராட்டினர். படத்தின் ட்ரைலரை விரைவில் வெளியிட இருக்கிறோம், அதில் படத்தின் கரு மற்றும் மற்ற கதாபாத்திரங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும்” என்றார்.

தீரஜ், துஷாரா மற்றும் பிரதாயினி சுர்வா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த போதை ஏறி புத்தி மாறி படத்தில், ராதாரவி, சார்லி, அஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரைஸ் ஈஸ்ட் கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்கும் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் கேஆர் சந்துரு. பாலசுப்ரமணியம் (ஒளிப்பதிவு), கே.பீ (இசை), அறிவு, முத்தமிழ் மற்றும் சுதன் பாலா (பாடல்கள்), வி.ஜே.சாபு ஜோசஃப் (படத்தொகுப்பு), கோபி ஆனந்த் (கலை), ‘ரக்கர்’ ராம்குமார் (சண்டைப்பயிற்சி), ஷெரிஃப் (நடனம்) மற்றும் பூர்ணிமா ராமசாமி (ஆடை வடிவமைப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர்.