நயன்தாரா போல திரையுலகில் நீடிக்க வேண்டும் டயானா சம்பிகா

அனைவரையும் கவரும் வண்ணம் போல திரை உலகில் நீடிக்க வேண்டும் என்பதே என் ஆசை என்று ‘அண்ணாதுரை’ படத்தின் நாயகி டயானா சம்பிகா கூறியுள்ளார்.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, டயானா சம்பிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அண்ணாதுரை’. ராதாரவி, காளி வெங்கட், நளினிகாந்த், ஜிவெல் மேரி மற்றும் ரிந்து ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் இசையமைப்பாளராகவும், எடிட்டராகவும் விஜய் ஆண்டனியே பணியாற்றியுள்ளார்.

இந்தப் படத்தில் இடம் பெறும் ஜிஎஸ்டி பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து நாயகி டயானா சம்பிகா கூறுகையில், ”நான் லயோலா கல்லூரியில் படித்து வருகிறேன். தொடர்ச்சியாக கதாநாயகர்களை வழங்கிக் கொண்டு இருக்கும் லயோலா கல்லூரியில் இருந்து வரும் முதல் கதாநாயகி நான்தான்.

சம்பிகா என்றால் இளவரசி என்று அர்த்தம். நான் அப்படித்தான் வாழ விரும்புகிறேன். படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் ரேவதி. பெயர் ராசியோ என்னவோ படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடமும் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அந்த நல்ல பெயருக்கு இயக்குனர் ஸ்ரீனிவாசன் முக்கியக் காரணம்.

ஸ்ரீதேவி போல ஸ்டைலாகவும், நயன்தாரா போல திரை ஆளுமையுடனும், த்ரிஷா போல என்றும் நிலைத்து, ஐஸ்வர்யா ராய் போல அனைவரையும் கவரும் வண்ணம் போல திரை உலகில் நீடிக்க வேண்டும் என்பதே என் ஆசை, அது நிச்சயம் நிறைவேறும்” என்றார் டயானா சம்பிகா.