கோமாதா பூஜை செய்து மாட்டுப்பொங்கல் கொண்டாடிய கவர்னர்

பட்டினப்பாக்கத்தில் இன்று பொதுமக்களுடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாட்டுப் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். பட்டினப்பாக்கம் கடலில் இறங்கி பால் ஊற்றி மலர்களை தூவி தீபாராதனை காட்டி வணங்கினார். பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள கோவில் மைதானத்துக்கு சென்று கோமாதா பூஜை நடத்தினார். பசுவுக்கும், கன்றுக்கும் தீபாராதனை காட்டி தொட்டு வணங்கினார். அவற்றுக்கு கீரைகளையும், பொங்கலையும் கொடுத்தார். பின்னர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு திரண்டிருந்த பொதுமக்களுக்கு தமிழில் ‘அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்’ என்று கூறினார். பொதுமக்களும் அவருக்கு பொங்கல் வாழ்த்து கூறினார்கள். பின்னர் கவர்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். கவர்னர் திடீரென்று வந்து கோமாதா பூஜை நடத்தி மாட்டுப் பொங்கல் கொண்டாடியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.