அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் தடியடி

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று இளைஞர்கள் உட்பட பலரும் போராட்டம் நடத்தினர். தொடக்கத்தில் போராட்டம் நடத்தியவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.ஆனால் போகப்போக கூட்டம் அதிகமானது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் திணறினர். இதனால் சிறிது வாக்குவாதங்களும் ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே இன்று காலை இந்தப் போராட்டத்தில் இயக்குநர் அமீர், நடிகர் ஆர்யா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் கவுதமன் ஆகியோரும் இங்கு வந்து சேர்ந்தனர்.
தொடர்ந்து அதிகமானோர் அந்த இடத்தில் கூட பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. இந்நிலையில் அவனியாபுரம் பேருந்து நிலையத்தில ஆர்பாட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இயக்குநர் கவுதமன் உட்பட காவல்துறையினர் ஆர்பாட்டக்காரர்களைக் கைது செய்தனர். ஜல்லிக்கட்டு தடையை நீக்கவும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்கவும் கோரி இவர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.