தனது மரணம் குறித்த செய்திக்கு புன்னகை முகத்துடன் பதில் – சுரேஷ் மேனன்

நடிகை ரேவதியின் முன்னாள் கணவரும், இயக்குனருமான சுரேஷ் மேனன் இறந்துவிட்டதாக செய்தி ஒன்று தொலைக்காட்சிகளிலும், ஒருசில இணையதளங்களிலும் பரவலாக பரவியது. ‘புதிய முகம்’ படத்தை இயக்கிய இயக்குனர் இறந்துவிட்டார் என்று ஆங்கில இணையதளங்களில் வெளியான செய்தியைத் தொடர்ந்து சுரேஷ் மேனன்தான் இறந்துவிட்டதாக நினைத்து பலரும் செய்திகளை வெளியிட தொடங்கினார்.

ஆனால், ஒரு சில நிமிடங்களிலேயே ‘புதிய முகம்’ என்ற மலையாள படத்தை இயக்கிய தீபன் என்பவர்தான் இறந்துவிட்டதாகவும், அது, தமிழில் ‘புதிய முகம்’ படத்தை எடுத்த சுரேஷ் மேனன் அல்ல என்று செய்தி வெளியானது. இந்த செய்தி சுரேஷ் மேனனின் பார்வைக்கும் சென்றுள்ளது.

இதுகுறித்து அவர் கூறும்போது, தான் இறந்துவிட்டதாக வெளிவந்த செய்தி முற்றிலும் தவறு. இந்த செய்தியை கேட்டவுடன் நான் என் முகத்தை கண்ணாடியில் பார்த்தேன். அப்போது அந்த முகம் என்னை பார்த்து சிரித்தது என்று கூறியுள்ளார். மேலும், அவர் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்திற்காக அப்போது எடுக்கப்பட்ட ‘செல்பி’ புகைப்படத்தையும் இணைத்து வெளியிட்டுள்ளார்.