வானரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முன்னாள் ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன், நடிகை கஸ்தூரி, இயக்குனர் பேரரசு மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசியதாவது
வெளியிட்டு விழாவில், பொய்யான
செய்திகளை போட்டு பிழைப்பு நடத்த வேண்டாம் – ’வானரன்’ இசை வெளியீட்டு விழாவில் யூடியுப் ஊடகங்களை விளாசிய நடிகை கஸ்தூரி
சினிமாவில் இருக்கும் பாதுகாப்பு வேறு எங்கும் இருக்காது என்பதை திமிராகவும், தைரியமாகவும் சொல்வேன் – ‘வானரன்’ இசை வெளியீட்டு விழாவில் கஸ்தூரி பேச்சு
பிரமாணப் பெண்களை ஒழுக்கம் இல்லாதவர்களாக காட்டுவது தான் சனாதானமா? – ‘வானரன்’ இசை வெளியீட்டு விழாவில் நடிகை கஸ்தூரி ஆவேசம்
அரசியல்வாதிகள் டோப்பா வைப்பதால், நடிகர்கள் டோப்பா வைப்பதை விட்டுவிட்டார்கள் – ‘வானரன்’ விழாவில் தமிழிசை செளந்தரராஜன் கிண்டல்
நாங்கள் காவியையும் கைவிட மாட்டோம், காவியமும் படைப்போம் – ‘வானரன்’ இசை வெளியீட்டு விழாவில் தமிழிசை செளந்தரராஜன் பேச்சு
ராமாபுரமும், பி.ஜே.பியும் சேர்ந்தால் எப்போதும் வெற்றி தான் – ‘வானரன்’ இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசிய இயக்குநர் பேரரசு
சினிமாவில் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – ‘வானரன்’ பட விழாவில் ஜாக்குவார் தங்கம் பேச்சு
ஆரஞ்ச் பிக்சர்ஸ் சார்பில் ராஜேஷ் பத்மநாபன் மற்றும் சுஜாதா ராஜேஷ் தயாரிப்பில், ‘டூ’ பட இயக்குநர் ஸ்ரீராம் பத்மநாபன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘வானரன்’. இதில், பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். அக்ஷயா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் லொள்ளு சபா ஜீவா, தீபா சங்கர், ஆதேஷ் பாலா, நாஞ்சில் விஜயன், எஸ்.எல் பாலாஜி, பேபி வர்ஷா, வெங்கட்ராஜ் , சிவகுரு, ராம்ராஜ், வெடிக்கண்ணன், மேடை கலைஞர்களான நாமக்கல் விஜயகாந்த், ஜூனியர் டி.ஆர் ஆகியோர் நடித்துள்ளனர்.
நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷாஜகான் இசையமைத்துள்ளார். வித்து ஜீவா படத்தொகுப்பு செய்துள்ளார். வெங்கட் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், முன்னாள் தமிழக பா.ஜ.க தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இசைக் குறுந்தகட்டை வெளியிட, நடிகை கஸ்தூரி பெற்றுக் கொண்டார். மேலும், இயக்குநர் பேரரசு, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி பேசுகையில்,
——————————————–
“வானரன் படத்தை தயாரித்திருக்கும் ராஜேஷ் மற்றும் சுஜாதா ராஜேஷுக்கு வாழ்த்துகள். இந்த காலக்கட்டத்தில் இப்படி ஒரு படத்தை தயாரித்திருப்பதற்காக வாழ்த்துகிறேன். நடிகர் விஷால் நடிகர் சங்க கட்டிடத்திற்காக திருமணமே செய்யாமல் இருந்தவர், அவரே இப்போது திருமணம் பற்றி அறிவித்து விட்டார். அதுபோல் இயக்குநர் ஸ்ரீராமும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவர் சினிமாவில் சாதித்த பிறகு திருமணம் செய்து கொள்வேன் என்று கூறுகிறார். என்னை பொருத்தவரை திருமணம் செய்து கொண்டு வெற்றிகரமாக வாழ்ந்தால், மற்ற விசயங்களை சாதாரணமாக ஊதி தள்ளிவிடலாம். பாடல்கள் மிக சிறப்பாக இருந்தது, இசையமைப்பாளர் ஷாஜகானுக்கு வாழ்த்துகள்.
இன்று திரையுலகம் என்றால் அதில் இருப்பவர்கள் மீது தவறான பார்வையை தற்போதைய ஊடகங்கள் ஏற்படுத்தி விடுகிறார்கள். அதனால் சினிமா என்றாலே வெளியே இருப்பவர்களுக்கு தவறான பார்வை இருக்கிறது, இதற்கு காரணம் தற்போதைய யூடியுப் ஊடகங்கள் தான், இதை சொல்வது கஷ்ட்டமாக இருந்தாலும் இது தான் உண்மை. ஆனால், உண்மையில் சினிமா தான் மிக பாதுகாப்பானது. நான் திமிராகவும், தைரியமாகவும் சொல்கிறேன், இன்று பாலியல் பாலத்காரம், கூட்டு பாலியல் பலாத்காரம் என்று தினம் தினம் செய்திகள் வருகிறது. ஆனால், சினிமாவில் அப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கிறதா?, சினிமாவை பற்றி கிசுகிசு எழுதுபவர்கள் இதை கவனிக்க வேண்டும், சினிமாவில் ஊழியர்கள் அத்துமீறிட்டார்கள், நடிகையிடம் தவறாக நடந்துக் கொண்டார்கள், என்று சொல்லியிருக்கிறார்களா? இருக்கவே இருக்காது. ஒரு கால் டாக்ஸியில் போக பயப்படுவார்கள், ஆனால் எங்க யூனியன் வாகனங்களில் நாங்கள் இரவு நேரத்தில் தைரியமாக பயணிப்போம். எனது சிகை அலங்கார நிபுணர், மேக்கப், ஆடை வடிவமைப்பாளர் என அனைவரும் ஆண்கள் தான், அவர்கள் என் சகோதரர்கள் போல் என்னுடன் பயணித்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் கவர்ச்சியாக காட்ட வேண்டும் என்றால் கூட, அந்த உடையை உடனடியாக தைத்து கொடுப்பவர் ஆண் தான். ஆனால், அவர்கள் வேலையை மட்டுமே பார்ப்பார்களே தவிர வேறு எதையும் பார்க்க மாட்டார்கள். எனவே சினிமா மீதான தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இன்று கூட ஒரு பேட்டியில் அல்வா வாங்கிய அனுபவம் எப்படி இருந்தது? என்று என்னிடம் கேட்டார்கள். இதை சத்யராஜிடம் யாரும் கேடக மாட்றாங்க, என்னிடம் தான் கேக்குறாங்க, அது ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த காட்சியை படமாக்கும் போது, வெயிலில் என் முதுகு வலித்தது, காட்சியை குறிப்பிட்ட நேரத்தில் எடுக்க வேண்டும், அதில் ரியாக்ஷன் கொடுக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் அந்த காட்சியை சரியாக எடுக்க வேண்டும் என்ற மனநிலையில் தான் இருப்பார்களே தவிர, அவர்கள் மனதில் வேறு எந்த எண்ணமும் இருக்காது. அப்படிப்பட்ட கஷ்ட்டங்களையும், நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் நீங்கள் சொன்னாலே உங்களுக்கு நல்ல டி.ஆர்.பி, வியூவ்ஸ் வரும். அதை விட்டுவிட்டு, பொய்யான செய்திகளை போட்டு பிழைப்பு நடத்த வேண்டாம் என்று இங்கே சொல்லிக் கொள்கிறேன்.
கேளிக்கை வரியை பாதியாக குறைத்திருக்கும் அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு கேளிக்கை வரியை பாதியாக குறைத்ததற்கு திரையுலகம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோன்று சிறிய படங்களுக்கு கேளிக்கை வரியை முழுவதுமாக குறைக்க வேண்டும், என்று நான் அரசிடம் கோரிக்கை வைக்கிறேன்.
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஒரு நோய் பரவி அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதை நான் பார்க்கிறேன். சனாதானத்தையும், சாதியையும் இழிவுப்படுத்தும் படங்கள், அது தான் பெரிய முற்போக்கு சிந்தனை என்று படைப்பாளிகளிடம் இருப்பதை பார்க்கிறோம். ஆனால், அப்படி வருகின்ற படங்களை மக்கள் முழுமையாக நிராகரிப்பதையும் பார்க்கிறோம். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவிலுக்கு ஆண்டி என்று சொல்வது போல், குறிப்பிட்ட சமூகத்தை கேலியாக சித்தரிக்கிறார்கள். ஆண்களாக இருந்தால் அவர்களை கேலியாக சித்தரிப்பது, பெண்களாக இருந்தால் அவர்களை ஒழுக்க குறைவாக சித்தரிக்கிறார்கள். பிராமணர்கள் என்று சொன்னால், அவர்களது பூணூலை வைத்து தவறான காட்சிகள் அமைக்கும் போக்கை நாம் பார்க்கிறோம். இது முற்போக்கு இல்லை, சமூக நீதி இல்லை, மதச்சார்பின்மை இல்லை. உண்மையான மதச்சார்பின்மை என்பது, இன்று இயக்குநராக ஸ்ரீராம் இருக்கிறார், இசையமைப்பாளராக ஷாஜகான் இருக்கிறார். எத்தனையா இயக்குநர்கள் சாதியையும், சமூகத்தையும் தவறாக வைத்து படம் இயக்கிக் கொண்டிருக்கும் வேலையில், நெற்றி முழுக்க அருமையான நாமத்தை சூடிக்கொண்டு, காவி சட்டையை போட்டுக்கொண்டு தயாரிப்பாளர், ஒரு இந்துவாக, ஒரு பிராமண சாதியை சார்ந்தவராக இந்த படத்தை எடுத்திருக்கிறார். இந்த படத்தில் ஹனுமான் வேடம் போட்டவருக்கும், இஸ்லாமிய ஒருவருக்கும் இடையே இருக்கும் புரிதலை, இனக்கத்தை அழகாக காட்டியிருக்கிறார்கள். இது தான் மதச்சார்பின்மை. இதைவிட்டு விட்டு மதம் மற்றும் சாதியை பற்றி தவறாக சித்தரித்து படம் எடுப்பது, மதச்சார்பின்மை இல்லை, அது ஒரு பொய் பித்தலாட்டம். உண்மையான மதச்சார்பின்மை என்றால் இந்த மேடையில் இந்துவும், இஸ்லாமியரும் இணைந்து பணியாற்றுகிறார்களே அது தான். சினிமாவில் சாதி, மதம் பார்ப்பதில்லை, நான் வந்த போதும் என்னிடம் என்ன ஆளு என்று எதுவும் கேட்கவில்லை. பின்னணியை தெரிந்து யாரும் படம் எடுப்பதில்லை, திறமையை மட்டுமே பார்த்து படம் எடுப்பது தான் சினிமா. அதிலும் மாறுபட்ட திசையில் பயணித்த சினிமாவை வேறு வழியில் திருப்பிய இயக்குநருக்கு பாராட்டுகள்.
இன்று திரைப்படங்களில் மாற்றம் வர வேண்டும், மக்களிடம் மாற்றம் வர வேண்டும். வானரன் மதம் சார்ந்த படம் இல்லை. அனைவருக்கான படம். அப்பா – மகள் பாசப்பினைப்பை சொல்லும் படம். இது மிக சிறந்த படம், மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த படமே ரொம்ப பாசிட்டிவாக இருக்கிறது. இந்த முயற்சிக்கு இங்கு வந்து ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் என் வாழ்த்துகள், ஜெய்ஹிந்த்,” என்றார்.
முன்னாள் கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில்,
——————————————–
“இது எனக்கு சற்று மாறுபட்ட மேடை, திரை மேடை என்பது எனக்கு அரிதானது. அரசியல் மேடை என்பது எனக்கு ஆசையானது. ஆனால், தமிழிசை இல்லாமல் திரைப்படங்கள் இல்லை, இந்த தமிழிசை நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு திரைப்பட இசை வெளியீட்டுக்காக வந்திருக்கிறேன், உங்களுக்கு என் வணக்கம். ராஜேஷ் மற்றும் சுஜாதா ராஜேஷ் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள்அவர்கள் இந்த படத்தை எப்படி தயாரித்தார்கள் என்று யோசித்த போது, அவர்கள் இருக்கும் இடம் ராமாபுரம். ராமாபுரத்தில் இருந்து வந்த சுதாஜாவும், ராஜேஷும் ராமரின் சீடர் ஹனுமானுக்காக ஒரு படம் எடுத்திருக்கிறார்கள், அந்த வகையில் மகிழ்ச்சி. இந்த இடத்தில் நான் ஒரு அரசியல் தலைவராகவோ அல்லது முன்னாள் ஆளுநராகவோ வரவில்லை. ஒரு ஹனுமான் பக்தையாக வந்திருக்கிறேன். பல நேரங்களில் திரைப்படத்துறையினர் பல கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள், பெப்ஸியை சேர்ந்த தோழர்களை நான் சந்தித்து பேசியிருக்கிறேன். இருந்தாலும், நான் அதிகமான திரைப்படங்களை பார்ப்பதில்லை, ஆனால் அந்த துறை சம்மந்தமான நபர்களை சந்திக்கும் போது அவர்களை பாராட்டுவேன். அப்படிப்பட்ட என்னை இந்த திரைப்படத்தின் விழாவுக்கு வரவைத்தது யார்? என்றால் சத்தியமாக ஹனுமான் தான் என்னை இங்கு வரவைத்தார். வேறு எந்த படத்திற்காகவும் நான் வந்திருப்பேனா என்று தெரியாது. எனவே இந்த நிகழ்ச்சிக்கு என்னை வரவைத்த ஹனுமானை வேண்டி, இந்த படத்திற்கு அவ்ர் வெற்றியை தர வேண்டும், வானரன் வானவியலான வெற்றியை பெற வேண்டும் என்று ஹனுமானை வேண்டிக்கொள்கிறேன்
இந்த படத்தை இயக்கியிருக்கும் ஸ்ரீராம், இங்கே என்ன பொருத்தம் பாருங்கள். ஸ்ரீராமரின் பக்தராக இருக்கும் ஹனுமானை ஸ்ரீராம் டைரக்ட் செய்தாரா அல்லது ஹனுமான் ஸ்ரீராமரை டைரக்ட் செய்தாரா, என்று தெரியாது. ஆனால் இருவரும் சரியான டைரக்ஷனில் போனார்கள் என்பது நமக்கு தெரியும். எனவே இயக்குநர் சரியான டைரக்ஷனில் போயிருக்கிறார், அவருக்கு என் வாழ்த்துகள் .இசையமைப்பாளர் ஷாஜகான், இது நல்ல ஒற்றுமை. எங்களுக்கு பலர் ஒரு சாயம் பூசினாலும், அதை எல்லாம் தாண்டி எல்லோரையும் ஒரே மாதிரி பார்ப்பது நாங்கள் மட்டும் தான். இன்று காலை கூட நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது ஒரு இஸ்லாமிய சகோதரி தான் என்னிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். எனவே நாங்கள் காவியம் படைப்பவர்கள், ஆனால் எங்களை காவி என்று நினைத்துக் கொள்கிறார்கள். அதே சமயம் காவியையும் நாங்கள் விட மாட்டோம். காவிக்கு சொந்தக்காரர்களாக இருந்தால் அவர்கள் செந்தூரத்திற்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள், அப்படி இருந்தால் அவர்கள் நாட்டை காப்பவர்களாகவும் இருப்பார்கள் என்பதை நாம் தெளிவாக சொல்லிக் கொள்ளலாம்.
பிஜேஷ் நாகேஷ் பற்றி டாக்டர்.ராஜ்குமார்
———————————————
சொல்லும் போது இயல்பாக நடித்தார் என்று கூறினார். அவர் நினைத்தால் டோப்பா வைத்து நடித்திருக்கலாம். அரசியல்வாதிகள் எல்லாம் டோப்பா வைக்க ஆரம்பித்த உடன், நடிகர்கள் எல்லாம் டோப்பா வைப்பதை விட்டுவிட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. நான் அரசியல் பேசவில்லை, எதார்த்தமாக பேசுகிறேன், டூப்பாகவும் பேச மாட்டேன், உண்மையாக மட்டுமே பேசுவேன். இப்படி பேசுவதால் நான் யாரையும் அவமரியாதை செய்யவில்லை. தமிழகத்தை ஆள்பவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. அதைவிட, இந்தியாவை ஆண்டுக் கொண்டிருக்கின்ற எங்கள் பாரத பிரதமர் மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. ஏன் என்றால், இந்த நாடு பாதுகாக்கப்படுகிறது என்றால், அதற்கு காரணம் பிரதமர் மோடி தான். செந்தூரம் மிகப்பெரிய கொள்கையை எடுத்துச் சொல்வதோடு, மிகப்பெரிய செய்தியை எடுத்துச் சொல்கிறது. பொதுமக்களை அழிக்காமல் தீவிரவாதிகளை மட்டும் எங்களால் அழிக்க முடியும், என்று அரசு சொல்லியிருக்கிறது. இன்று கேன்சர் செல்களை அழிக்கும் போது நல்ல செல்களையும் அழிக்க வேண்டி இருக்கும். ஆனால், நமது மிகப்பெரிய ராணுவத்தினால் தனது சரியான வழிகாட்டுதலினால், விஞ்ஞானம் செய்ய முடியாத ஒன்றை, புற்றுநோய் திசுக்களை அழிக்கும் போது நல்ல திசுக்களையும் அழிக்கும் சூழல் மருத்துவத்துறையில் இருக்கும் போது, சுற்றி இருக்கும் மக்களை காப்பற்றிவிட்டு, தீவிரவாதிகளை மட்டுமே அழிப்பேன், ஏன் என்றால் நான் மனிதாபிமானி என்று சொல்லியிருக்கும் பாரத பிரதமர் மோடி அவர்களின் தொண்டனாக இங்கு நின்றுக்கொண்டிருக்கிறேன், ராமரின் தொடண்டரை போல. எங்கெல்லாம் ராமாயணம் இசைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் ஹனுமான் அமர்ந்திருப்பார் என்று எங்கள் திருநெல்வேலியில் சொல்வார்கள். அங்கு ராமர் கதை நடந்தால் ஹனுமானுக்கு ஒரு இருக்கை இருக்கும். எனவே, ஹனுமான் பற்றிய படத்தின் இந்த விழாவில் ஹனுமான் இங்கே நிச்சயமாக இருப்பார், என்று நான் நம்புகிறேன்.
இது கவர்ச்சிகரமான படமா என்றால் இல்லை, சண்டை, நடனம் இருக்க முடியாது. இது ஒரு நல்ல குடும்ப கதையாக இருந்து, மற்றவர்களுக்கு உதவும் கதையாக இருக்கிறது. இந்த இசைத்தட்டு வெளியிடும் இந்த செந்தூரம் தமிழகம் முழுவதும் இந்த வானரன் படத்தை வெறி பெற வைக்கும் என்று நம்புகிறேன். இன்று குடும்ப படங்கள், ஒழுக்கத்தை சொல்லும் படங்கள் வெற்றி பெறுவதாக நான் கேள்விபடுகிறேன். எனவே எளிமையான படங்கள் வெற்றி பெறுவது போல் இந்த ‘வானரன்’ படம் வெற்றி பெற வேண்டும். நான் கவர்னராக இருந்த போதும் சரி, எப்போதும் சரி எந்த நிகழ்ச்சிக்கு சென்று தொடங்கி வைத்தாலும், அது மிகப்பெரிய வெற்றி பெறும். அதுபோல் இந்த வானரன் படமும் வெற்றி பெறும். ஞாயிற்றுக்கிழமை ஒரு நிகழ்ச்சிக்கு கூட்டம் கூடுவது எவ்வளவு கஷ்ட்டம் என்று அரசியல்வாதியான எனக்கு தெரியும். சில நேரங்களில் கொடுப்பதை கொடுத்தால் தான் கூட்டம் வரும். அப்படி ஒரு நிலையில், இந்த வானரன் நிகழ்ச்சிக்கு இவ்வளவு கூட்டம் வந்திருப்பதே மிகப்பெரிய வெற்றி. வானரன் படத்திற்கு நிச்சயம் ஹனுமான் அருள் இருக்கும், அவரது அருள் படத்தை மிகப்பெரிய வெற்றி பெற வைக்கும் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன், நன்றி.” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில்,
—————————————
“வானரன் ஸ்ரீராம் இயக்குநர். வானரன் என்றாலே ஹனுமான் தான், அவர் தான் ஸ்ரீராம் ஸ்ரீராம் என்று சொல்வார். இங்கு ஸ்ரீராம் ஆஞ்சநேயர் என்று சொல்லியிருக்கிறார். நாகேஷ் மிகப்பெரிய நடிகர், அவரது வாரிசு நடிக்க வந்தது மகிழ்ச்சி. அவரது நடிப்பு இயல்பாக இருந்தது. இந்த கதைக்கு ஏற்ற உருவம். அந்த குழந்தையும் சிறப்பாக நடித்திருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு குழந்தை சிறப்பாக நடித்ததை இந்த படத்தில் தான் பார்க்கிறேன். இந்த படத்தை வெளியிடப்போகிறவர் ராமாபுரம் ராஜேஷ் பி.ஜே.பி, பி.ஜே.பியுடன் ராமாபுரம் சேர்ந்தாலே வெற்றி தான். எனவே இந்த படமும் வெற்றி தான். கதாநாயகி ஹோம்லியாக இருக்கிறார், நன்றாக நடித்திருக்கிறார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இந்த படம் வித்தியாசமான கதையாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஹனுமான், ராமர் வேடம் போடுகிறவர்களை நாம் பார்ப்போம், ஆனால் அவர்களுகு என்று ஒரு வாழ்க்கை இருக்கும், அவர்களுக்கு வலிகள் இருக்கும், அது தான் இந்த படம் என்று நினைக்கிறேன். மற்ற வேஷங்களை விட ஹனுமான் வேஷம் போடுவது கஷ்ட்டம் மட்டும் அல்ல, அவர்களது முகம் தெரியாது. ஆனால், இந்த படத்தில் அந்த முகத்தை காட்டியிருக்கிறார். அது தான் இந்த படத்தின் சிறப்பு. படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.
ஜாக்குவார் தங்கம் பேசுகையில்,
—————————————–
“’வானரன்’ படத்தின் பாடல்கள், டிரைலர் மிக சிறப்பாக இருந்தது. பிஜேஸ் நாகேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். சிறுமி ஸ்ரீ வர்ஷினி சிறப்பாக நடித்திருக்கிறார். படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும், படக்குழுவுக்கு என் வாழ்த்துகள். தமிழிசை அக்கா முன்பு ஒரு தகவலை சொல்ல நினைத்தேன், ஆனால் அவர் கிளம்பி விட்டார். இருந்தாலும் ஊடகங்கள் முன்னிலையில் சொல்கிறேன், என்னுடைய சீல் மற்றும் கையெழுத்து போட்டு கில்டில் சுமார் 15 பேரை சேர்த்திருக்கிறார்கள், அவர்களுக்கு சென்சார் சான்றிதழ் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இது பற்றி போலீசில் புகார் அளித்திருக்கிறேன், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறேன், என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். இதை இங்கு சொல்வதற்கு காரணம், சினிமாவில் யாரும் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக தான். கஸ்தூரி மேடம் சொன்னது போல், சினிமா ஊழியர்கள் தங்களுடன் பணியாற்றுபவர்களை ரொம்பவே பாதுகாப்பார்கள், அவர்கள் தான் பெப்ஸி ஊழியர்கள். அவர்கள் பணதை எதிர்பார்க்க மாட்டார்கள், கூட இருக்கும் நட்சத்திரங்களின் பாதுகாப்பு தான் அவர்களுக்கு முக்கியம். நான் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்த போது கூட நடிகர்கள் மீது தூசு கூட விழாமல் பார்த்துக் கொள்வேம். எனவே, பெப்ஸி தொழிலாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே இருக்கும் பிரச்சனை சுமூகமாக முடிய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இங்கு நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். உடல் இல்லாமல் உயிர் இல்லை, உயிர் இல்லாமல் உடல் இல்லை என்பது போல் தான், தயாரிப்பாளர்கள் இல்லாமல் தொழிலாளர்கள் இல்லை, தொழிலாளர்கள் இல்லாமல் தயாரிப்பாளர்கள் இல்லை. இயக்குநர் ஸ்ரீராமுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். வானரன் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும், நன்றி.” என்றார்.
இயக்குநர் ஸ்ரீராம் பத்மநாபன் பேசுகையில்,
—————————————–
“இங்கு வந்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. இந்த வானரன் மனிதத்தை பேசும் ஒரு படம். இந்த மாதிரி ஆஞ்சநேயர் வேஷம் போட்டு போகிறவர்களை ஒரு இடத்தில் கடவுளாக பார்ப்பார்கள், ஒரு இடத்தில் பிச்சைக்காரராக பார்த்து விரட்டி விடுவார்கள். ஆனால், அவர்கள் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான ரியாக்ஷனோடு தான் இருப்பார்கள். அவர்களை பற்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். இது என்னுடைய சிறுகதை தொகுப்பில் இருந்து எடுத்த கதை தான். அப்பா – மகள் இடையிலான பாசப்போராட்டத்துடன், அவர்களின் வாழ்க்கையையும் தொட்டுவிட்டு போகலாம் என்ற முயற்சியில் தான் இந்த படத்தை எடுத்திருக்கிறேன்.
நான் ஏன் திருமணம் செய்யவில்லை என்று கேட்டார்கள், பத்து வருடம் முன்பே திருமணம் செய்திருக்க வேண்டும், அப்போது ஜீவா சார், நாம வள்ளலார், வினோபா போல இருக்கலாம் சார், எதற்கு கல்யாணம் என்று கேட்டார். அதனால் விட்டுவிட்டேன். ஆனால் இப்போது அவர் பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டார். இந்த பிரசாத் லேப் ரொம்ப ராசியான இடம், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் இங்கு தான் திருமணம் பற்றி அறிவித்தார், விஷால் சாரும் அறிவித்தார், அதுபோல் நானும் என்னுடைய திருமண தேதியை அறிவிக்கிறேன், அக்டோபர் 31. சொல்லி வைப்போம், எதாவது எனக்கும் கிடைக்கிறதா என்று பார்ப்போம்.
நாகேஷ் சார் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவரது பேரனை இயக்குவது எனக்கு சந்தோஷமாக இருந்தது. அதேபோல் காலை 6 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 5.30 -க்கு அவர் வந்துவிடுவார். அந்த அளவுக்கு அவர் தொழில் பக்தி உடையவர். ஹனுமான் வேஷம் போட்டுக்கிட்டு செருப்பு இல்லாமல் நடப்பது என்று கடினமாக உழைத்திருக்கிறார். ஸ்ரீ வர்ஷினி நன்றாக நடித்திருக்கிறார். சூப்பர் சிங்கர் போகும் முன்பே இந்த படத்தில் ஒப்பந்தம் ஆனார், இப்போது அவரது வளர்ச்சியை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் நிச்சயம் மக்களுக்கு பிடிக்கும், நன்றி.” என்றார்.
படத்தின் நாயகன் பிஜேஷ் பேசுகையில்,
——————————————-
“எங்கள் நிகழ்ச்சிக்கு வந்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி. தமிழிசை மேடம், கஸ்தூரி மேடம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இந்த படத்தில் ஒரு சோசியல் மெசஜ் இருக்கிறது. கிராமிய கலைஞர்கள், பகல் வேஷம் போடுபவர்கள் பற்றிய சோசியல் மெசஜ் இருக்கிறது. அவர்களது குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சி, மரியாதை வந்தாலே நாங்க ஜெயிச்சிடுவோம், நன்றி.” என்றார்.