நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி’ படக் குழு

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்படும் காவிய திரைப்படமான ‘வாரணாசி’ படக்குழு – ‘ருத்ரா’வின் கதாபாத்திரத்தை உலகுக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தும் வகையில் இரண்டு பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

முதல் புகைப்படம்- அடர்ந்த வனப்பகுதியின் நடுவே மூங்கில் தெப்பத்தில் ஓய்வெடுக்கும் ருத்ராவை காண்பிக்கிறது. இதில் அவர் இயல்பான கம்பீரத்துடனும், கவனம் ஈர்க்கும் தன்மையுடனும் தனது கதாபாத்திரத்திற்கே உரித்தான அமைதியான தோற்றத்துடனும் காட்சியளிக்கிறார்.

இரண்டாவது புகைப்படம்- நம்மை கென்யாவின் மாசாய் மாரா ( Maasai Mara) சமவெளிகளுக்கு அழைத்துச் செல்கிறது. அங்கு ஒட்டகச்சிவிங்கிகள் மற்றும் வைல்ட்பீஸ்ட் ( Wildebeest) விலங்குகளுக்கு நடுவே நிற்கும் ருத்ரா மறுக்க முடியாத – அதிகார தோரணையில் பின்னோக்கி பார்க்கிறார்.

இந்த இரண்டு புகைப்படங்களும் வாரணாசி- #VARANASI படத்தின் ஆன்மாவை நமக்கு உணர்த்துகின்றன. இது உலகம் முழுவதும் பயணிக்கும்… ஒரு நூற்றாண்டு காலத்தை உள்ளடக்கிய காவியமாகும். இதில் ஒரு மனிதனின் அசாதாரணமான பயணம் – அவரை இந்தியாவின் புனித நீர் நிலைகளில் இருந்து பூமியின் மிகவும் காட்டுமிராண்டித்தனமான மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளுக்கு அழைத்துச் செல்கிறது.

இது தொடர்பாக இயக்குநர் எஸ். எஸ். ராஜமவுலி குறிப்பிடுகையில்.., ”தன்னைவிட பெரியதொரு நோக்கத்தை நிறைவேற்றவே ருத்ரா பிறந்தான். அவன் தான் கோராத ஒரு விதியை சுமந்து கொண்டிருக்கிறான். அவன் நகைச்சுவை உணர்வு மிக்கவன். அதே தருணத்தில் மென்மையானவனும் கூட. அத்துடன் அவன் மிகக் கடுமையானவனும் ஆவான். அந்த பரிமாணங்களை தான் மகேஷ் பாபு அக்கதாபாத்திரத்திற்குள் கொண்டு வந்தார். யாராலும் கடுமையான தோற்றத்தை வெளிப்படுத்த முடியும். ஆனால் ஒரே தருணத்தில் கடுமையையும்… மென்மையையும்… வெளிப்படுத்தக் கூடியவர்கள் மிகச் சிலரே.

இந்த காட்சிகள் எங்களின் ஆப்பிரிக்க படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டவை. எந்த ஒரு செயற்கையாக அமைக்கப்பட்ட அரங்கங்களாலும் தர இயலாத ஒன்றை… அந்த நில பரப்பு எங்களுக்கு வழங்கியது. கிளிமஞ்சாரோ மற்றும் மாசாய் மாரா சமவெளி பகுதிகளில் படப்பிடிப்பு நடத்திய போது… நான் வியந்து போனேன். காலை நேரங்களில் எங்கள் கண்முன் விரிந்து கிடந்த காட்சிகளை 1:43:1 ஐமேக்ஸ் ( IMAX) திரையால் கூட முழுமையாக உள்வாங்க முடியாது என்று நான் உணர்ந்தேன்” என்றார் 

எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் எம். எம். கீரவாணியின் இசையில் உருவாகும் ‘வாரணாசி-#VARANASI’ திரைப்படத்தை ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் ( Sri Durga Arts) மற்றும் ஷோயிங் பிசினஸ் ( Showing Business) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த திரைப்படம் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி முதல் உலகம் முழுவதும் ஐமேக்ஸ் ( IMAX) தொழில்நுட்பத்தில் வெளியாகிறது.