ஜீவாவின் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜீவா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தில் ஜீவா, இவானா, பரிதாபங்கள் சுதாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஹாசினி பவித்ரா மேற்கொள்ள படத்தொகுப்பு பணிகளை ஆஷிஷ் ஜோசப் கவனித்திருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை மலேசியா புகழ் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டத்தோ அப்துல் மாலிக் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்… இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து படப்பிடிப்புக்குப் பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது என்றும், விரைவில் இப்படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான ‘சிவா மனசுல சக்தி’ படத்திற்கு பிறகு 16 ஆண்டுகள் கழித்து இருவரும் மீண்டும் கூட்டணி அமைத்திருப்பதாலும், நடிகர் ஜீவா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் வணிக ரீதியான வெற்றிய பெற்றதாலும், எம்.ராஜேஷ் – ஜீவா – யுவன் சங்கர் ராஜா – மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் – கூட்டணியில் தயாராகும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.