மனதை தேற்றிக் கொள்கிறேன் ஏன் என்றால் இனி நீ கடவுளின் குழந்தை – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்

திருச்சி நடுக்காட்டு பட்டியில் உள்ள தனது தோட்டத்தில் ஆழ்துளை குழாயில் குழந்தை சுஜித் வெள்ளிக்கிழமை மாலை விழுந்தான். விஷயம் அறிந்து சில மணி நேரத்திலேயே அங்கு வந்து விட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த 4 நாட்களாக குழந்தையின் உடலை வெளியே எடுக்கும் வரை நடுக்காட்டியிலேயே மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் உடன், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, உள்ளிட்டோர் உடனிருந்தனர். தீபாவளி பண்டிகையையும் மறந்து, தூக்கமின்றி, குழந்தை மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த அமைச்சர் விஜயபாஸ்கருக்கு குழந்தை இறந்தது என்ற செய்தி தனிப்பட்ட முறையில் அதிர்ச்சி அளித்தது.

நாடே ஆவலாக குழந்தை உயிருடன் மீண்டு வந்து விடுவான் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் குழந்தை பிணமாக மீட்கப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது.

குழந்தை இறப்புக்கு பலரும், பல துறையினரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் முழுநேரமும் மீட்புப்பணியில் ஈடுபட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனையில் இறுதி அஞ்சலி செலுத்தும் போது தனது இரங்கலை கனத்த இதயத்தோடும், வருத்தத்துடனும் பதிவு செய்துள்ளார்.

அமைச்சர் விஜயகுமாரின் இரங்கல் பதிவு :

* நான் மட்டுமல்ல இந்த உலகமே தன் பிள்ளையாய் நினைத்த சுர்ஜித்தின் அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது என் மனம் வலிக்கிறது

* எப்படியும் வந்து விடுவாய் என்று தான் ஊனின்றி உறக்கமின்றி இரவு பகலாய் இமை மூடாமல் உழைத்தோம்  இப்படி என்னை புலம்பி அழ விடுவாய் என்று எண்ணவில்லை

* கருவறை இருட்டு போல் உள்ளே இருப்பாய் என நினைத்தோம் கல்லறையில் மாறும் என்று நினைக்கவில்லை

* மருத்துவமனையில் வைத்து உச்சபட்ச மருத்துவமனைக்கு காத்திருந்தேன் இப்போது மார்ச்சுவரியில் பார்க்கும் நிலையில் கனத்துக் கிடக்கிறது

* 85 அடி ஆழத்தில் நான் கேட்ட உன் மூச்சு சத்தம் தான் என்னை மீட்புப் பணியில் ஒரு தந்தை ஸ்தானத்தில் பாச பிணைப்பில் இணைத்து இயங்க வைத்தது

* மனதை தேற்றிக் கொள்கிறேன் ஏன் என்றால் இனி நீ கடவுளின் குழந்தை

* சோகத்தின் நிழலில் வேதனையின் வழியில்… 

டாக்டர் சி.விஜயபாஸ்கர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்