மாற்றுத் திறனாளிகளுக்காக உலக சாதனை

ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். இந்த  அமைப்பு  ஊடகங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள்  வாயிலாக சமூகவிழிப்புணர்வு  கருத்துகளை  கூறி வருவதன் மூலம் மிகவும் பிரபலமானது. குழந்தைகளுக்கு இலவச கல்வி, பெண்கள்  முன்னேற்றத்தைக் கூறும் சாதனைப் பெண்கள், சாலையோரம் பசித்திருக்கும் ஏழை மக்களுக்கு  உணவு வழங்கும் விருந்தாளி திட்டம் போன்றவை ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நற்பணிக்கு சான்றுகளாகும். இந்த அமைப்பின் நல்லெண்ணத் தூதராக ஆஸ்கார் வென்ற இசைப்புயல்  ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா உள்ளார்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 3-ம் தேதி, ரெயின்ட்ராப்ஸ்  அமைப்பு வேல் டெக் பல்கலைக்கழகத்துடன் இணைந்து உலக  சாதனைமுயற்சியாக வானமே  எல்லை என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ஒருங்கிணைந்து குரல் கொடுத்தால் உலகம்  நமக்கு செவி சாய்க்கும் என்பதே வானமே எல்லை நிகழ்ச்சியின் தாரக மந்திரமாகும்.  மாற்றுத்  திறனாளிகள் தங்களுக்குரிய உரிமை, நலன்களைப் பெற்று கண்ணியத்துடன் வாழ யாவரும் அணி  திரள வேண்டும் என்ற நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

உலக அளவில் சக்கர நாற்காலி பயன்பாட்டாளரின் எண்ணிக்கை 3 கோடி பேர் என்ற அளவில்  உள்ளது. எனவே, இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ரெயின்ட்ராப்ஸ்  மற்றும் வேல் டெக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 1550 பேர் கூடி நின்று பிரம்மாண்ட அளவில்  சக்கர நாற்காலி வடிவத்தை உருவாக்கினர். இந்த நிகழ்வு ஆசிய மற்றும் இந்திய  சாதனை  புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக ஆசிய சாதனை புத்தகத்தின் தென் இந்திய தலைவர் விவேக் அவர்களால் அதிகார்வபூர்வமாக அறிவிக்கப்பட்டு, கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற உள்ளது.

இந்த உலக சாதனை நிகழ்ச்சியின் போது ஏ.ஆர்.ரெஹானா அவர்களின் இசையில், பாடலாசிரியர்  மதன் கார்க்கி வரிகளில் உருவான மாற்றுத்திறனாளிகளும் சமூகத்தின் ஒரு அங்கம், அவர்களால்  வியத்தகு பல சாதனைகளை படைக்க முடியும் என்ற கருத்துக்கள் பொதிந்த விழிப்புணர்வு  பாடலின் ஒளி வடிவம் வெளியிடப்பட்டது.  இந்த பாடலை பவதாரிணி மற்றும் அரவிந்த்  பாடியுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், வேல் டெக் பல்கலைகழகத்தின் நிர்வாக இயக்குனர்கள், ரங்கராஜன் மற்றும்  டாக்டர்.சகுந்தலா ரங்கராஜன், விஜிபி குழுமத்தின் தலைவர் விஜிசந்தோசம், இசையமைப்பாளர்  ஏ.ஆர்.ரெஹானா, தமிழ் நாடு உதவிக்கரம் உடல் ஊனமுற்றோர் சங்க தலைவர் வரதக்குட்டி, தமிழ் நாடு உதவிக்கரம் உடல் ஊனமுற்றோர் சங்க தலைவர் வரதக்குட்டி, ரெய்ன் ட்ராப்ப்ஸ் அமைப்பின் நிறுவன தலைவர் அரவிந்த் ஜெயபால், ஆனந்தம் முதியோர் இல்ல நிர்வாகி  பாகீரதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.