சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை காலிகுடங்களுடன் முற்றுகையிட்ட மக்கள்

கோவில்பட்டி அருகேயுள்ள மாதாபுரம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு சீவல்பேரி கூட்டு குடிநீர் திட்ட மூலமாக 15 நாளைக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் 10 ரூபாய் வரை விலை கொடுத்து ஒரு குடம் தண்ணீர் வாங்க வேண்டிய நிலை உள்ளதால், மாதாபுரம் கிராமத்திற்கு தனி நல்லி அமைத்து சீராக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும், சாலை விரிவாக்க பணியின் போது அகற்றப்பட்ட பேருந்து நிறுத்ததினை மீண்டும் அமைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் விடுதலை சிறுத்தைகள் வடக்கு மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் காலிகுடங்களுடன் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தங்களது கோரிக்கை மனுவினை கோட்டாட்சியர் அனிதாவிடம் வழங்கினர். கோட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.