தயாரிப்பாளர் தாணு, விஷால் மீது ஆவேசம்

வருகிற ஏப்ரல் 2-ஆம் தேதி தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் டி.சிவா, கேயார், விஷால் உள்ளிட்ட 5 அணிகள் களமிறங்குகின்றன. இந்நிலையில், நேற்று விஷால் அணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் விஷால் பேசும்போது, தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள பிரச்சினைகளை பற்றியும், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளை பற்றியும் விமர்சித்து பேசினார். இவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தாணு தலைமையிலான தயாரிப்பாளர்கள் சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சங்க அலுவலகத்தை முற்றுகையிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று நடிகர் சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் விஷாலை கைது செய்யவேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர். 

அப்போது கலைப்புலி தாணு கூறும்போது, விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ன கஷ்டத்தை கொடுத்தது? தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஒற்றுமை இல்லை என ஏளனம் செய்வதும், எள்ளி நகையாடுவதும் தவறு. விஷால் நடிகர் சங்கத்தை சுடுகாட்டாக மாற்றிவிட்டார். 40 வயது ஆகிவிட்ட நிலையில் விஷால் சீக்கிரமாக கல்யாணம் செய்து கொள்ளுங்கள். விஷால் என்று பெயர் வைத்துக் கொண்டு உடம்பு முழுவதும் விஷம் வைத்துள்ளார். விஷாலால் நடிகர் சங்கத்தில் நாசருக்கு அவமானம் மட்டுமே மிஞ்சும் என்றும் கூறினார்.  பின்னர், நடிகர் பிரகாஷ்ராஜ் பற்றி கூறும்போது, ‘நீங்கள் கால்ஷீட் கொடுத்து ஒழுங்கா நடிக்க போங்க. கூட்டு குடும்பமாக நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். மொழி, இனம், மதம் வாரியாக பிரிவினையைத் தூண்டும் விதமாக உங்கள் பேச்சு அமையலாமா? நீங்கள் திருந்திக் கொள்ளவேண்டும், திருத்திக் கொள்ளுங்கள்’ என்றார்.